ஞாயிறு, 27 மார்ச், 2011

காற்று

ஆழமாக ஒரு முறை சுவாசியுங்கள். உங்களது நெஞ்சு எப்படி விரிவடைகிறது? நீங்கள் சுவாசித்த காற்றினால் நுரையீரல்கள் நிரம்புவதால்தான் நெஞ்சு விரிவடைகிறது. காற்றை உங்களால் காண முடியாது. என்றாலும், உங்களைச் சுற்றி காற்று உண்டு. காற்றடிக்கும் வேளைகளில் காற்று இருப்பதை நாம் உணரலாம்.


புவியைச் சுற்றி காற்று மண்டலம் உண்டு. வாயுக்கள் ஒன்று சேர்ந்து உருவாகும் காற்றினால்தான் கிரகங்களில் இந்த வளி மண்டலம் உருவாகின்றது.

காற்று என்றால் என்ன?
காற்று என்பது பல வாயுக்களின் கலவையாகும். நைதரசன், ஒட்சிசன், ஆகன் என்பன காற்றிலுள்ள பிரதான வாயுக்களாகும். காற்றில் மிகச் சிறிதளவான ஐதரசன், காபனீரொட்சைட்டு, நீராவி, ஹீலியம் போன்ற வாயுக்களும் காணப்படுகின்றன. மனிதர்கள் மற்றும் மிருகங்களுக்கு மிகவும் பிரதானமானது ஒட்சிசன் ஆகும். இவர்களது உயிர் வாழ்க்கைக்கு ஒட்சிசனையே சுவாசிக்க வேண்டும்.

காபனீரொட்சைட்டு தாவரங்களுக்கு மிக முக்கியமான வாயுவாகும். தவரங்கள், உணவுத் தயாரிப்புக்கு காபனீரொட்சைட்டையும் சூரிய ஒளியையும் பயன்படுத்துகின்றன. அவை தமது சுவாசத்தின் போது காபனீரொட்சைட்டை உள்ளெடுத்து ஒட்சிசனை வெளி விடுகின்றன. மனிதன் மற்றும் ஏனைய விலங்குகள் ஒட்சிசனை உள்ளெடுத்து காபனீரொட்சைட்டை வெளிவிடுகின்றன.

காற்றை எடுத்துச் செல்லல்
உயிர் வாழ்வதற்கு காற்று தேவைப்பட்டாலும், காற்றில்லாத இடங்களுக்கும் மனிதன் போக முடியும். நீருக்கடியில் காற்று இல்லை, ஆனாலும் சுழியோடிகள் அடிக்கடி நீருக்கடியில் செல்வதுண்டு. மூச்சைப் பிடித்த வண்ணம் சிறிது நேரம் மட்டுமே நீருக்கடியில் இருக்க முடியும். ஆனால், காற்றடைத்த தாங்கிகளின் உதவியுடன் நீருக்கடியில் நீண்ட நேரம் இருக்க முடியும். சுழியோடிகள் இவ்வாறான தாங்கிகளை தமது முதுகுகளில் வைத்திருப்பர். இந்தத் தாங்கிகள் காற்றினால் நிரப்பப் பட்டிருக்கும். சுழியோடிகள் இந்தத் தாங்கிகளிலிருந்து இறப்பர் குழாய்களினூடாக சுவாசிப்பார்கள்.

வளி மண்டலத்தில் உயரப் போகப் போக காற்று குறைவாக இருக்கும். இதனால், உயர்ந்த மலை உச்சிகளுக்குச் செல்வோருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. விமானங்களிலும் காற்று எடுத்துச் செல்லபடுகிறது. விமானம் குறித்த உயரத்தை அடைந்த பின், பயனிகள் இருக்கும் பகுதிக்குள் காற்று செலுத்தப்படுகிறது. விண்வெளியில் காற்று அறவே இல்லை. எனவே விண்வெளிக்குச் செல்வோர் தமக்குத் தேவையான அளவு காற்றை எடுத்துச் செல்வர்.   

மாவனல்லையிலிருந்து  தகவலை அனுப்பிய தம்பிக்கு நன்றிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக