செவ்வாய், 12 அக்டோபர், 2010

இஸ்லாத்துக்குப் புத்துயிரூட்டிய சீர்திருத்த முன்னோடிகள்

உலகில் தோன்றிய அனைத்து நபிமார்களும் அனைத்து வகையான ஜாஹிலிய்யத்துக்களையும் ஒழித்து இறைவனது தீனை நிலை நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அடிப்படையில்
அனைத்து இறைத்தூதர்களும் மூன்று வகையான ஜாஹிலிய்யத்துக்களை ஒழிப்பதற்காகப் போராடி வந்துள்ளார்கள்.

அவையாவன:
1. தூய ஜாஹிலிய்யத் (இது நாத்திகத்தைக் குறிக்கும்)
2. ஜாஹிலிய்யதுஷ் ஷிர்க் (இது இணைவைத்தலைக் குறிக்கும்)
3. ஜாஹிலிய்யதுர்-ரஹ்பானிய்யா (இது துறவறத்தைக் குறிக்கும்)

இறைத்தூதர்கள் வரிசையில் இறுதியாக வந்த நபி (ஸல்) அவர்களும் குறித்த மூன்று வகையான ஜாஹிலிய்யத்துக்களையும் ஒழித்துக்கட்டும் பணியில் ஈடுபட்டதுடன், தமது முயற்சியில் பூரண வெற்றியும் கண்டார்கள். உண்மையான, ஒரு முழுமையான தன்னிகரற்ற ஒர் இஸ்லாமிய சமூகத்தை உருவாக்கிவிட்டுச் செல்லும் பாக்கியத்தையும் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். நபியவர்களுக்குப்பின் மேற்குறிப்பிடப்பட்ட ஜாஹிலிய்யத்துக்கள் தலை தூக்காவண்ணம் செயல்படுத்துவதற்கும், தலை தூக்கும்போது அவற்றை ஒழித்துக்கட்டி இஸ்லாத்தின் தூய்ம்மையைப் பாதுகாக்கவும் செயல் வீரர்கள் அவசியப்பட்hர்கள். நபியவர்களுக்குப்பின் இறைத்தூதர்கள் வரமாட்டார்கள் என்பதால், இறைத்தூதர்கள் மேற்கொண்ட இப்பணியை முஸ்லிம் உம்மத்தினர் ஏற்று மேற்கொள்ள வேண்டியிருந்தது. இந்தவகையில் நபியவர்களைத் தொடர்ந்து இஸ்லாத்துக்குப் புத்துயிரூட்டும் பணியை, அடுத்துவந்த குலபாஉர்-ராஷிதூன்கள் வெகு சிறப்பாக மேற்கொண்டனர். இவர்களைத் தொடர்ந்து முஸ்லிம் உம்மத்தில் குழப்பங்களும், சீர்கேடுகளும் மீண்டும் தலைதூக்கலாயின. ஜாஹிலிய்யத்துக்கள் பல பரிமாணங்களில் தோற்றம் பெற்றது மாத்திரமன்றி அவை இஸ்லாத்தின்மீது ஆதிக்கம் செலுத்தவும் பார்த்தன. இந்த நிலை தஜ்தீத் அல்லது இஸ்லாஹ் எனும் சீர்திருத்தப்பணியின் தேவையையும் அவசியத்தையும் உணர்த்தியது.

உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்)

“மார்க்கத்தை நாமே இறக்கினோம், அதை நாமே பாதுகாப்போம்.” எனும் இறைவாக்கின்படியும், “சத்தியத்தில் நிலைத்திருக்கும் ஒரு குழு என்றும், எப்போதும் என் உம்மத்தில் இருந்து கொண்டே இருக்கும்” எனும் நபிகளாரின் வாக்கின்படியும் இக்காலத்தில் சில சீர்திருத்தவாதிகள் தோன்றினர். இவ்வகையில் இஸ்லாமியச் சீர்திருத்தப் பணிக்கு முன்னோடியாகக் கொள்ளப்படுபவர் இரண்டாம் உமர் என்றும், ராசிதூன்களின் வாரிசு என்றும் அழைக்கப்படும் உமர்பின் அப்துல் அஸீஸ் அவர்களாவர். இவர் ஹிஜ்ரி 61இல் பிறந்து ஹிஜ்ரி 101இல் மரணித்தார். ஆட்சிபீடத்துக்கு வருவதற்கு முன் மிக ஆடம்பரமாக வாழ்ந்தவர் இவர். எனினும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதைத் தொடர்ந்து அவர் தன்போக்கை முற்றாக மாற்றிக் கொண்டார். பரம்பரை ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் மக்களிடம் ‘பைஅத்’ வாங்கினார். அத்துடன் அரச ஆடம்பரங்களையும் துறந்து அமீருல் முஃமினூனுக்குரிய பண்புகளைக் கடைப்பிடிக்கலானார். அவர்களின் சீர்திருத்தப்பணி அவர்களின் வீட்டிலிருந்து துவங்கியது. அரச குடும்பத்துக்கு இருந்த விஷேட சலுகைகளை இரத்துச் செய்தார். தனக்கும் அரச குடும்பத்துக்கும் என்றிருந்த சொத்துக்களை பொது நிதி – பைத்துல்மாலில் சேர்ப்பித்தார். அரச குடும்பத்தார் அநியாயமாகப் பறித்து வைத்திருந்த சொத்துக்களை உரியவர்களிடம் கொடுத்தார். இத்தகைய மாற்றம் காரணமாக எந்தளவு தூரம் அவர்களது வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டதெனில் 50,000 தீனார்களாக இருந்த அவர்களது வருட வருமானம், 200 தீனார்களாகக் குறைந்தது. பைத்துல்மாலில் இருந்து வழங்கப்படுகின்ற வேதனத்தைக் கூட அவர் பெற்றுக் கொள்ள மறுத்தார்.

இவ்வாறு வீட்டிலே பல சீர்திருத்தங்களை மேற்கொண்ட இவர், தன் கவனத்தை ஆட்சியின் பால் திருப்பினார். அநியாயக்கார கவர்னர்களை (Governor) வேலை நீக்கம் செய்தார். நினைத்தவாறெல்லாம் செயற்பட்டு வந்த அதிகாரிகளை சட்டத்தினால் கட்டுப்படுத்தினார். அநியாயமாக விதிக்கப்பட்ட வரிகளை நீக்கினார். ஸகாத் அமைப்பை மறுசீரமைப்புச் செய்தார். முன்பு அரச குடும்பத்துக்காக அதிகமாகச் செலவிடப்பட்ட பைத்துல்மால் நிதியை நாட்டுமக்களின் நலனுக்காகச் செலவு செய்யும் விதத்தில் வழிவகைகளை மேற்கொண்டார். தமது ஆட்சியில் இருந்த முஸ்லிமல்லாதோரையும் முறையாக நடாத்தத் தயங்கவில்லை. அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலையில் இருந்த வணக்க நிலையங்களைத் திருப்பிக் கொடுத்தார். அவர்களது சொத்துக்களையும் மீட்டுக் கொடுத்தார்.

அடுத்து அவர் தனது கவனத்தை பொதுமக்கள்பால் செலுத்தினார். தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி சுமார் அரை நூற்றாண்டு கால ஜாஹிலிய்யத்தில் இருந்து மக்களை மீட்டு, அவர்களை இஸ்லாத்தின்பால் வழிநடாத்தி முழு வாழ்வையும் இஸ்லாமிய மயப்படுத்த முயன்றார். இம்முயற்சியில் பிழையான கொள்கைகளைத் தடுத்தார். மக்களுக்குக் கல்வியூட்ட வேண்டிய ஏற்பாடுகளையும் செய்தார். இஸ்லாமியக் கலைகளில் உலமாக்களை ஈடுபாடு கொள்ளச் செய்தார். இவர்களின் இத்தகைய முயற்சிகளின் பயனாக ஒரு பெரும் அறிவியக்கமே தோன்றியது. மத்ஹப்களது நான்கு இமாம்களும் கூட இவர்களின் முயற்சிகளின் பலனாக உருவானவர்களே. மக்கள் மத்தியில் இருந்த அனைத்து வகையான தீமைகளையும் ஒழித்துக் கட்டினார். பல்லாயிரக் கணக்கானோர் இவர்களின் காலத்தில் இஸ்லாத்தைத் தழுவியமையும் அவர்களது சீர்திருத்தப் பணியில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அல்பலதூரி தனது ‘புதூகுல் புல்தான்’ எனும் நூலில் “இந்தியாவில் இருந்த அரசர்களுக்குக் கூட இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுத்து உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்கள் நிருபங்களை வரைந்தார்.” எனக் குறிப்பிடுகின்றார். மொரோக்கோவிலும் கூட இஸ்லாம் பரவுவதற்கு இவரது முயற்சியே காரணமாக அமைந்தது என்று வரலாறு கூறுகின்றது. ஹதீஸ்கள் உத்தியோகபூர்வமாகத் தொகுக்கப்பட முன்னோடியாக இருந்தவரும் இவரே ஆவார். அன்னாரே ஒரு பெரிய அறிஞராகவும் திகழ்ந்தார் என்பதுவும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. அவர்கள் பல ஹதீஸ்களையும் அறிவித்துள்ளார்கள். இவ்வாறு சிறந்ததொரு முஜத்திதாக, முஸ்லிஹாக சீர்திருத்தப்பணியில் சுமார் இரண்டரை வருட காலம் ஈடுபட்டு வெற்றியும் கண்ட இவர்கள் ஹிஜ்ரி 101இல் நஞ்சூட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள்.

கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து இஸ்லாமிய ஷரீஆவும், சமூகமும் (உம்மத்) சீர்குலைய ஆரம்பித்தன. ஆடம்பர மோகமும், சடரீதியான சிந்தனைப் போக்குகளும் தலை தூக்கின. பண்பாட்டுத்துறையில் பயங்கர வீழ்ச்சி ஏற்படும் போக்குகள், அறிகுறிகள் தென்படலாயின. இங்கும் இஸ்லாமிய சீர்திருத்தப்பணியில் இஸ்லாத்துக்குப் புத்துயிரூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய மனிதர்கள் தேவைப்பட்டார்கள். இந்த வகையில் இக்காலப் பிரிவில் தோன்றிய முக்கிய சீர்திருத்தவாதிகளாக இமாம் கஸ்ஸாலி, ஸஈத் இப்னு ஜூபைல், முஹம்மத் பின் ஷீரீன், அஷ்ஷஅபீ போன்றோரைக் குறிப்பிடலாம். இவர்கள் அனைவருக்கும் இக்காலப் பிரிவில் தலைமை வகித்த மாபெரும் சீர்திருத்தவாதியாக ஹஸனுல்பஸரீ அவர்களைக் குறிப்பிடலாம். அக்கால மக்களை நல்வழிப்படுத்துவதற்காக இவர்களது உரைகளும், உபதேசங்களும் மகத்தானவை – அற்புதமானவை. இவற்றோடு மாத்திரம் நின்று விடாமல் அவர்கள் அன்றைய ஆட்சியமைப்பில் கண்ட தவறுகளை சுட்டிக்காண்பித்து அவற்றை ஒடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோராகவும் இருந்து வந்தார்கள். இவரைத் தொடர்ந்து இவர்களது வாரிசுகளான மாணவர்கள் குறித்த பணியைத் தொடர்ந்தார்கள். அவர்களின் மாணவர்களில் இமாம்களான அல் அவ்தாஈ, சுபியான் அஸ்ஸெளரி, ஸாலிஹ் பின் அப்துல் ஜெலீல் என்போர் குறிப்பிடத்தக்கவர்களாவர். இக்காலப் பிரிவில் தோன்றிய இஸ்லாமிய அறிஞர்கள் வெறுமனே மார்க்க உபண்ணியாசங்களைச் செய்வதோடு தம் பணியை நிறுத்திக் கொள்ளாமல் அன்றிருந்த பிழையான ஆட்சியமைப்பை மாற்றியமைக்கவும் அயராது உழைத்தார்கள். ஸைத் இப்னு அலி இப்னுல் ஹ{ஸைன் அவர்கள் அன்றிருந்த ஆட்சியமைப்பை மாற்றியமைக்க முயற்சித்த வேளையில் இமாம் அபூ ஹனீபா போன்றோரும் அவருக்குத் துணை நின்றனர். இமாம் அபூ ஹனீபா அவருக்கு 1000 திர்ஹம்களை அளித்து உதவியும் செய்தார். சிறிது காலத்துக்குப்பின் இதே முயற்சியில் ஈடுபட்ட முஹம்மத் பின் அப்துல்லா என்பாருக்கம் அவரது சகோதரர் முஹம்மதுக்கும் இமாம்களான மாலிக், அபூ ஹனீபா போன்றோர் பக்கபலமாக நின்றனர். (கலீபா மன்சூருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சி தோல்வியில் முடிந்தது)

நாற்பெரும் இமாம்கள் (அஇம்மதுல் அர்பாஃ)

உமர் பின் அப்துல் அஸீஸ் துவக்கி வைத்த அறிவியலியக்கத்தின் விளைவாக இஸ்லாமிய சட்டத்துறையில் தேர்ச்சிபெற்ற பல அறிஞர்கள் தோன்றினார்கள். அவர்களில் நான்கு இமாம்கள் என நாம் வழங்கும் 1. இமாம் அபூ ஹனீபா (ரஹ்) 2. இமாம் மாலிக் (ரஹ்) 3. இமாம் ஷாபிஈ (ரஹ்)  4. அஹ்மத் இப்னு ஹம்பல்  (ரஹ்)  ஆகியோர் முக்கியமானவர்களாவர். அவர்களது மகத்தான அறிவுப் பணியின் விளைவை இன்றும் இஸ்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. இஸ்லாமிய அறிவியல் துறைக்கென அவர்கள் செய்த தியாகங்கள் விபரிக்க முடியாதவையாகும். இமாம் அபூ ஹனீபா அவர்களுக்கு இரு தடவைகள் பிரதம நீதியரசர் பதவியை ஏற்குமாறு அன்றிருந்த அரசாங்கம் வேண்டிக் கொண்ட போதும் அன்றைய அரசில் இமாம் அபூ ஹனீபா, தாம் கண்ட குறைகள் காரணமாக அன்னார் அப்பதவியை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். அவ்வாறு ஏற்க மறுத்ததன் காரணத்தினால் சிறையிலிட்டு தண்டிக்கப்பட்டார்கள். ஈற்றில் அவர்கள் சிறையிலேயேதான் மரணத்தையும் தழுவிக்கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆட்சிக்குத் திருப்தி அளிக்காத ஒரு தீர்ப்பினை வழங்கியமைக்காக இமாம் மாலிக் இருநூறு கசையடிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டி இருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களின் இரண்டு புயங்களும் கழற்றப்பட்டன. அன்றிருந்த பிழையான சிந்தனைப் போக்குகளுக்கு எதிராகப் போராடிய இமாம் அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் அனுபவித்த வேதனைகள் சொல்லும் தரமன்று. “இமாமுல் முன்தஹ்” எனும் பட்டப்பெயரால் அழைக்கப்படும் அளவுக்கு பயங்கரமான சோதனைக்கு அவர்கள் ஆளானார்கள்.

இந்த இமாம்களின் அறிவுப் பணியைப் பொறுத்தவரை இவர்கள் இஸ்லாமிய சட்டத்துறைக்கு அளப்பரிய தொண்டுகளைச் செய்தார்கள். இமாம் அபூ ஹனீபா அவர்கள் சுமார் 60.000 மார்க்கச் சட்டப் பிரச்சினைளை ஆராய்ந்து அவற்றுக்குரிய தீர்ப்புக்களை வழங்கினார்கள். சுமார் 36000 சட்டப்பிரச்சினைகளுக்கு இமாம் மாலிக் அவர்கள் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். இமாம் ஷாபிஈ அவர்களின் கிதாப் அல் உம்மு எனும் இஸ்லாமிய சட்டத்துறை சார்ந்த நூல் ஏழு பாகங்களைக் கொண்டதாகும். இமாம் அஹ்மத் பின் ஹன்பலின் மார்க்க விளக்கங்களை உள்ளடக்கிய ஒரு பெரு நூலையும் முஸ்லிம் சமூகம் பெற்றுக் கொண்டது. நாற்பது பாகங்களைக் கொண்ட இப்பெரு நூல் அல்-ஜாமிஃ லில் உலூம் அஹ்மத் பின் ஹன்பல் என்றழைக்கப்படுகின்றது.

இவர்களைத் தொடர்ந்து இவர்களது மாணவர்கள் இப்பணியை மேலும் முன்னெடுத்துச் சென்றார்கள். இமாம் அபூஹனீபாவின் முக்கியமான மாணவர்களுள் இமாம்களான அபூ-யூஸ{ப், முஹம்மத் பின் ஹஸன், ஸ{பர், போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இமாம் மாலிக்கின் மாணவர்களுள் அப்துல்லாஹ் பின் வஹப், யஹ்யா பின்அல்-லைஸீ முக்கியமானவர்கள். அல்-புவைதீ, அல்-முஸ்னீ, ரபீஆ முதலானோர் இமாம் ஷாபிஈக்குப்பின்னர் சட்டத்துறையில் ஈடுபட்டுவந்த அவரது முக்கிய மாணவர்களாவர். இமாம் அஹ்மதின் மாணவர்களுள் இப்னு குதைமா சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். அவரது அல்-முக்னீ எனும் இஸ்லாமிய சட்டத்துறை பற்றிய நூல் மிகப் பிரபலமானதாகும்.

அகீதாத் துறை அறிஞர்கள்

இவ்வாறு இவர்கள் சட்டத்துறையில் ஈடுபாடுகாட்டிச் சீர்திருத்தங்களைச் செய்து வந்த வேளையில் மறுதுறையில் இஸ்லாமிய அகீதா தொடர்பான கோட்பாடுகளை பிழையான கருத்தோட்டங்களில் இருந்து முஸ்லிம் சமூகத்தைப் பாதுக்கும் மற்றுமொரு பெரும் பணியும் தொடர்ந்தது. அன்று பரவிவந்த பிழையான முஃதஸிலாப் போக்கிற்கு எதிராக பல இமாம்கள் முனைப்போடு செயல்படலானார்கள். அவர்களில் இமாம் அபுல் ஹஸன் அல்-அஷ்அரீ முக்கியமானவர். இவர் முஃதஸிலாக்களோடு பல விவாதங்கள் நடாத்தியுள்ளதுடன் அவர்களது கொள்கைகள் பிழையானவை என்பதையும் தக்க ஆதாரங்களை முன்வைத்து நிரூபிப்பதிலும் வெற்றி கண்டார். சுமார் 103 நூல்களை இவர் எழுதியுள்ளார். அகீதாத் துறையில் உழைத்த மற்றுமோர் இமாமாக அபூ மன்ஸ{ர் அல்-மாத்ரூதி இனங்காணப்படுகின்றார்.

பிற்பட்டகால இஸ்லாமிய சமூகத்திலேற்பட்ட அறிவாராய்ச்சியின் விளைவாகப் பல கலைகளும் அறிவு ஞானங்களும் தோற்றம் பெற்றன. இக்காலப்பிரிவில் வாழ்ந்த  முஸ்லிம் அறிஞர்களே சமகால உலகின் அறிவியல் தொழிநுட்ப முன்னேற்றத்துக்கு அத்திவாரமிட்hர்கள். முஸ்லிம்களின் இத்தகைய முயற்சிகள் இஸ்லாத்தை அடிப்டையாகக் கொண்டமைந்திருந்தாலும் சிலபோது அவை கிரேக்க, ரோம சிந்தனைகளாலும் பாதிப்புக்குள்ளாயின. இதனால் இஸ்லாமிய கலைகள் பலவற்றில் இஸ்லாம் அல்லாத பிழையான சிந்தனைகளும் இடம்பெறும் பேராபத்துத் தோன்றியது. இந்நிலையில் குறித்த பிழையான சிந்தனைகளில் இருந்து இஸ்லாத்தையும், அதன் கலைகளையும் பாதுகாக்கவேண்டிய ஒரு நிர்ப்பந்த சூழ்நிலை உருவாகியது.

இமாம் அல்-கஸ்ஸாலி (ரஹ்)

இத்தகையதொரு பாரிய தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலேயே இமாம் கஸ்ஸாலி அவர்களது தோற்றம் இடம் பெறுகின்றது. இவர் ஹிஜ்ரி 450ல் பிறந்தார். மாபெரும் மேதையாக, சிந்தனையாளராக இவர் தனது காலத்தில் திகழ்ந்தார். இந்நிலையில் அவர் இஸ்லாத்துக்கு ஆற்றிய பணிகள் மிகமிக மகத்தானவை. அன்று இஸ்லாத்துக்குப் பெரும் சவாலாக இருந்த கிரேக்கத்              தத்துவங்களையும் சிந்தனைகளையும் ஆழமாகக் கற்ற அவர், அவற்றுள் இஸ்லாத்துக்கு முரணானவை எவை என்பதையும் அறிவுபூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் நிறுவினார். தனது தஹாகபதுல்-பகலாஸிகபா எனும் நூலினூடாகத் தனது கருத்துக்களை வழங்கினார். இவர் இஸ்லாமிய அடிப்படையிலான கல்வித்திட்டத்தையும், வாழ்க்கைப் போக்கையும் வகுத்துக் கொடுத்தார். இக்கல்வித்திட்டம் பாரம்பரிய இஸ்லாமியக் கல்லூரிகளில் அமுலில் இருப்பதை இன்றும் நாம் காணலாம். தனது கல்வித்திட்டத்தைப் போதிப்பதற்கும் நடைமுறைப்படுத்தவுமே பக்தாதில் மத்ரஸதுன்-நிழாமிய்யாவை நிறுவினார்.

இஸ்லாமிய ஒழுக்கவியல் கோட்பாட்டை விளக்குகின்ற ஓர் அற்புதமான நூலையும் இமாம் கஸ்ஸாலி எழுதினார். அதுவே இஹ்யா உலூமுத்தீன் என்றழைக்கப்படுகின்றது. தான் வாழ்ந்த காலத்தில் இஸ்லாத்தின் பேரால் இருந்த பரவுகள் அனைத்தையும் ஆராய்ந்த இவர், சரியான இஸ்லாமியக் கண்ணோட்டத்தைக் கொண்ட பிரிவினர் யாவர் என்பதனை அல்-முன்கிழ் மினழ்ழலால் எனும் நூல் மூலம் விளக்கினார். அன்றிருந்த பிழையான ஆட்சி அமைப்பையும் இவர் சாடத்தவறவில்லை. இவரது தூண்டுதலால் இவரது மாணவர்கள் பலர் ஒன்று சேர்ந்து மொரோகோ நாட்டில் இமாம் கஸ்ஸாலி காணவிரும்பிய தூய இஸ்லாமிய ஆட்சியை நிறுவினர் என பிரபல வரலாற்றாசிரியர் அலி இப்னு கல்தூன் குறிப்பிடுகின்றார்.

ஷெய்க் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்)

இக்காலப்பிரிவில் தோன்றிய மற்றுமொரு சீர்திருத்தவாதியாகக் கருதப்படுபவரே ஷெய்க் அப்துல் காதிர் ஜீலானி (ரஹற்) அவர்களாவார். ஹிஜ்ரி 470ல் ஈரானிலுள்ள ஜீலான் எனும் கிராமத்தில் பிறந்த இவர், ஓர் ஆசிரியராகவும், தாஇயாகவும், இஸ்லாமியப் பிரசாரகராகவும் திகழ்ந்தார். இஸ்லாமியக் கலைகளை மாணவர்களுக்குப் போதித்து வந்த அவர், அக்கால மக்களை உலகியல் சிந்தனைகளில் இருந்தும், சடரீதியான போக்குகளில் இருந்தும் விடுவித்து, இஸ்லாமிய வழியில் வழி நடாத்தும் பணியிலும் ஈடுபட்டார். இறந்துபோயிருந்த ஆயிரமாயிரம் உள்ளங்களில் இஸ்லாத்தின் ஒளியை ஏற்றி உயிர்ப்பித்துப் பிரகாசிக்கச் செய்த மாபெரும் அற்புதத்தைத் தனது வாழ் நாளிலேயே நிகழ்த்திக் காட்டினார். இதனாலேயே இவர் முஹ்யித்தீன் (மார்க்கத்தை உயிர்ப்பித்தவர்) என அழைக்கப்பட்டார். இவரது ஆழமான, தாக்கம் மிக்க உபதேசங்கள் இன்றும் எமக்குப் பயனளிப்பனவாகவே அமைந்துள்ளன. தாம் வாழ்ந்த காலத்தில் கலீபாக்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டிய இவர், அன்றிருந்த ஆட்சியாளருக்கு வால்பிடித்த அறிஞர்களையும் கடுமையாகச் சாடினார். தூய்மையான ஏகத்துவத்தை நிலைநாட்டப் பாடுபட்ட அவரது அரிய கருத்துக்களையும், உபதேசங்களையும் கபுதூஹ{ல் கைடிப் எனும் அவரது மற்றுமொரு நூலில் காணலாம்.

மௌலானா ஜலாலுத்தீன் ரூமீ (ரஹ்)

ஹிஜ்ரி 604ல் பிறந்த மாபெரும் இஸ்லாமியத் தத்துவ ஞானியான மௌலானா ஜலாலுத்தீன் ரூமீயும் இஸ்லாமிய சீர்திருத்த வாதிகள் வரிசையில் முக்கிய இடம் வகிப்பவராவார். இஸ்லாத்துக்கு முரணான தத்துவக் கருத்துக்களை விமர்சித்துச், சரியான இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தூய்ம்மையைப் பாதுகாப்பதற்கு இவர் மகத்தான பங்களிப்புச் செய்துள்ளார்.

அல்லாமா இப்னு தைமிய்யா (ரஹ்)

இஸ்லாமிய சீர்திருத்தவாதிகள் வரிசையில் ஹிஜ்ரி 601ல் பிறந்த இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டியவராவார். இவர் வாழ்ந்த காலப்பிரிவு முஸ்லிம் உம்மத் எல்லாத் துறைகளிலும் படுவீழ்ச்சியுற்றிருந்த ஒரு காலப்பிரிவாகும். தாத்தாரியரின் கடும் தாக்குதலுக்குட்பட்டு முஸ்லிம் சமூகம் அழிந்து கொண்டிருந்தது. ஒழுக்க வீழ்ச்சியும் பண்பாட்டு வீழ்ச்சியும் காணப்பட்டு வந்த அதே வேளையில் மக்கள் இஸ்லாத்தை விட்டும் வெகு தூரம் சென்றிருந்தனர். இவ்வேளையில் முஸ்லிம் சமூகத்தை இராணுவ ரீதியிலான படையெடுப்பிலிருந்தும் சிந்தனா ரீதியிலான படையெடுப்பிலிருந்தும் பாதுகாக்க வேண்டிய ஓர் அவசியத் தேவை ஏற்பட்டது. இவ்வாறான ஓர் இக்கட்டான காலப் பிரிவில்தான் இமாம் இப்னு தைமிய்யாவின் தோற்றம் இடம்பெறுகிறது. உலகில் வாழ்ந்த அபார ஞாபக சக்தியும் விவேகமும் கொண்ட மனிதர்களில் ஒருவராக இவர் செயல்பட்டு வந்தார். ஒரு தனி மனிதனிடம் ஒருங்கே அமையப்பெற்றுக் காணப்பட முடியாத பல பண்புகளையும் ஆற்றல்களையும் இவர் பெற்றிருந்தார். இப்னு தைமிய்யா அறிந்திராத ஒரு நபிமொழி ஒரு நபிமொழியாகவே இருக்க முடியாது என்று கூறுமளவுக்கு ஹதீஸ் துறையில் விற்;பண்ணராகவும், அல்-குர்ஆன் வியாக்கியானியாகவும் இஸ்லாமிய சட்டத்துறை வல்லுணராகவும் திகழ்ந்தார். அதே வேளையில் எல்லா வகையான தத்துவ ஞானங்களையும் கற்றுத் தேர்ந்த ஒரு தலைசிறந்த தத்துவ ஞானியாகவும் விளங்கினார். கிரேக்கத் தத்துவ ஞானங்களின் பிழையான தன்மையை நிரூபிப்பதில் இவர், இமாம் கஸ்ஸாலியையும் மிகைத்துவிட்டதாக அறிஞர்கள் கருதுகின்றனர். இஸ்லாமிய அகீதாவினதும் ஷரீஆவினதும் உண்மையினை நிறுவுவதிலும் அவற்றைப் பாதுகாப்பதிலும் அல்லாமா இப்னு தைமிய்யா வெற்றி கண்டார்.

குருட்டுத்தனமான தக்லீதை எதிர்த்து வந்த அவர் நூதன அனுஷ்டானங்களையும், மூட நம்பிக்கைகளையும் ஒழிப்பதில் மும்முறம் காட்டினார். இத்தயை இவரது அறிவுப்பணியானது இவரது ஜிஹாதீய செயல்பாடுகளுக்கு எந்தவகையிலும் தடையாக அமையவில்லை. தாத்தாரியரின் படையெடுப்புக்கு எதிராகப் படை திரட்டிச் சென்றவர்வர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மஜ்மூஃ பதாவா இப்னு தைமிய்யா, அல்-உபூதிய்யா, இஃதிழாஉஸ் ஸிராதல் முஸ்தகீம் முதலாம் கிரந்தங்கள் அவரது படைப்புக்களில் குறிப்பிடத்தக்கவை.

இந்தியாவில்  முஜத்தித்களின் பணி

இந்திய உப-கண்டத்திலும் காலத்துக்குக் காலம் பல முஜத்தித்கள் தோற்றம் பெற்றனர். அவர்களில் ஷெய்க் அஹ்மத் ஸிர்ஹிந்தீ குறிப்பிடத்தக்கவர். அன்றைய மொகலாய மன்னர் அக்பர் தோற்றுவித்த இஸ்லாத்துக்கு முரணான தீனே இலாஹீ எனும் புது மதத்தை எதிர்த்துப் போராடி இஸ்லாத்தின் தூய்ம்மையைப் பாதுகாப்பதில் அவர் மகத்தான பங்களிப்புச் செய்தார். இவரைத் தொடர்ந்து வந்த ஒரு மாபெரும் மேதையே ஷாஹ் வலிய்யுல்லாஹ் திஹ்லவீ ஆவார். அவரது இஸ்லாமிய அறிவுப்பணி மிகமிக மகத்தானதாகும். இவர் எழுதிய ஹ{ஜ்ஜதுல்லாஹில் பாலிகா எனும் பிரபலமான நூல் பயன்மிக்க ஓர் ஆக்கமாகும். இவரைத் தொடர்ந்து இவரது பணியை இமாம்களான அஹ்மத் அஷ்ஷஹீத், இஸ்மாஈல் அஷ்-ஷஹீத் போன்றோர் தொடர்ந்தனர். இந்தியாவில் வீழ்ந்துபோன இஸ்லாமிய கிலாபத்தை மீண்டும் தாபிப்பதற்காக இவ்விருவரும்  மேற்கொண்ட   முயற்சிகளும், காட்டிய முனைப்புக்களும் அளப்பரியன.


By: M.S.M. Boosary B.A.(Hons)     071 8203627 / 0725461154  /  0332278153

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக