சனி, 9 அக்டோபர், 2010

ஆசிரியர் இடமாற்றம் ஒரு சதியா?

'பத்து வருடங்களுக்கு மேல் தொடர்ந்து ஒரே பாடசாலையில் பணி புரியும் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள்' என்ற கொள்கையின் அடிப்படையில், கம்பஹா வலயத்திலுள்ள சில ஆசிரியர்களுக்கு இடமாற்றத்துக்கான அறிவிப்புகள் சுற்றறிக்கைகள் மூலம் கிடைக்கப் பெற்றுள்ளன. இதன் படி,
2011 ஜனவரி 01 முதல் குறித்த இடமாற்றங்கள் அமுலாக்கப் படவேண்டும்.

இந்த சுற்றறிக்கை தொடர்பாக பல ஆசிரியர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். ஏனெனில், பத்து வருடங்களுக்கு மேல் ஒரே பாடசாலையில் தொடர்ந்து பணி புரியும் பலரை இந்த சுற்றறிக்கை கண்டு கொள்ளவில்லை; மாறாக பத்து வருடம் பூர்த்தியடைந்த ஆசிரியர்களுள் தெரிவு செய்யப்பட்ட குறித்த சில ஆசிரியர்களுக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இது பல விதத்திலும் சந்தேகத்தைக் கிளப்பக் கூடியதாக இருக்கிறது.

உதாரணமாக, திஹாரிய அல் அஸ்ஹர் பாடசாலையில் பத்து வருடத்துக்கு மேல் சேவை புரியும் ஆசிரியர்கள் நாற்பதுக்கு மேல் இருந்தும், ஒரு சிலருக்கு மட்டுமே இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்ற நிலை அல் பத்ரியா, மற்றும் ஏனைய பாடசாலைகளிலும் காணப்படுகிறது.

கஹட்டோவிட்ட பாலிகாவுக்கு, உடுகொட அரபாவிலிருந்து, தற்காலிகமாக மாற்றம் பெற்றுள்ள விஞ்ஞான ஆசிரியைக்கு, அல் அஸ்ஹருக்கு மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. விஞ்ஞான ஆசிரியரை, தேவையுள்ள பாடசாலைக்கு வழங்காமல், ஏற்கனவே விஞ்ஞான ஆசிரியர்கள் பலரைக் கொண்டுள்ள அல் அஸ்ஹருக்கே வழங்கி இருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அத்துடன் கஹட்டோவிட்ட பாலிகாவில் மூவர் திஹாரிய அல் அஸ்ஹருக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், அவ்ர்களுக்குப் பதிலாக மூவர் திஹாரிய அல் அஸ்ஹரிலிருந்து கஹட்டோவிட்ட பாலிகாவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுள் பாலிகாவுக்கு வரவுள்ள ஒரு ஆசிரியை இன்னும் இரண்டு வருடத்துக்குள் ஓய்வு பெற இருப்பவராவார். ஓய்வு பெற நெருங்கி இருப்பவர்களுக்கு, பொதுவாக, அவர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு மாற்றம் கொடுப்பதே வழக்கம். இந்த நடவடிக்கையால், குறித்த ஆசிரியைக்கு ஒரு சலுகை மறுக்கப்படுவதுடன், பாலிகா பாடசாலைக்கு இன்னும் இரண்டு வருடத்துக்குள் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது.

எமது ஊரைப் பொறுத்தவரை, பாலிகா வளர்ந்து வருகின்ற ஒரு பாடசாலை. விஞ்ஞான ஆசிரியரின்மை மற்றும் ஏனைய ஆசிரியர் பற்றாக்குறை என்பன அதன் வளர்ச்சியில் பாரிய சறுக்கலை ஏற்படுத்தும். அத்துடன் இந்த இடமாற்றத்தின் மூலம் அதிகம் பாதிக்கப்படப் போவதும் கஹட்டோவிட்ட பாலிகாதான். எனவே, பாலிகாவை வீழ்த்துவதற்கென்றே தயாரிக்கப்பட்ட ஒரு சுற்று நிருபமாகவே இந்த இடமாற்றம் பற்றி எண்ணத் தோன்றுகிறது.

இதேபோல், அல் பத்ரியாவிலும், வரவுள்ள ஆசிரியர்களுக்கும் செல்லவுள்ள ஆசிரியர்களுக்குமிடையில் உள்ள திறமை/ செல்வாக்கு வித்தியாசங்கள், பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதாக பலரும் பேசிக்கொள்வதைக் கேட்கக் கூடியதாக இருந்தது.

மொத்தத்தில், இந்த இடமாற்ற சுற்று நிருபம், எமது ஊருக்கே உளை வைக்கப் போவதாகவே படுகிறது. எனவே, உரியவர்கள் முன்வந்து, எமது கல்வி நிலை சறுகிச் செல்ல விடாமல், உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பதும் கடமையாகும்.  

2 கருத்துகள்:

  1. வேண்டாதவன் பெண்டாட்டியின் கைபட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் என்பர். அது போலல்லவா உங்கள் கட்டுரை. இது பாலிகாவிற்கு சதியான இடமாற்றமல்ல, முழு இலங்கையிலும் நடக்கும் இடமாற்றம்...!

    பதிலளிநீக்கு
  2. அதிரடி அன்பரே,
    வந்துள்ள இடமாற்றம், நீங்கள் கூறியது போல் முழு நாட்டுக்கும் பொதுவானதல்ல. அது மேல் மாகாணப் பாடசாலைகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப் பட்டுள்ளது என்பதை நீங்கள் அறியாதிருக்கலாம். நாட்டின் எல்லாப் பகுதிக்கும் பொதுவான விடயமாக இருந்தாலும் நமக்கு நஷ்டம் என்று வரும் போது பார்த்துக்கொண்டிருக்கலாமா? நீங்கள் அப்படிப் பட்டவர் என்றால், உங்களுக்கு இந்த விடயம் வேண்டாத பெண்டாட்டியாக இருக்கலாம்...... ஆனால், பொறுப்புள்ள பத்ரியாவின் SDS அங்கத்தவர் ஒருவர், ஏற்கனவே மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ள சிலருக்குப் பதிலாக, வேறு நல்ல ஆசிரியர்களை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளாராமே. அது மட்டுமன்றி, தமக்கு பாதிப்பாக அமையும் பட்சத்தில், தமக்குக் கீழுள்ள ஆசிரியர்களை விட முடியாது என பாலிகா அதிபர் கூறியுள்ளாரே. படித்தவர்கள் இப்படி சிந்திக்கும் போது, நீங்கள் மட்டும் ஏன் வேறு விதமாக.............

    பதிலளிநீக்கு