சனி, 2 அக்டோபர், 2010

கலவரம் தடுத்த முன்மாதிரி சம்பவம்

நேற்று(01.10.2010) ஜும்ஆ நேரம். ஓகொடபொள பள்ளிவாசலில் எல்லோரும் முதலாம் ரக்அத்தில் இருந்தார்கள். பள்ளிவாசலின் முன்னால் கஹட்டோவிட்ட - வெயாங்கொட சேவையில் ஈடுபடும் பஸ் வண்
டி வந்து நின்றது. வீதிக்குக் குறுக்காக, தொழுவதற்கு வந்த ஒரு சகோதரரின் மோட்டார் சைக்கிள். அதனைத் தாண்டி பஸ் செல்ல முடியாது.

"பீ.....ப், பீ.................ப்!" ஹோர்ன் சப்தம் ஆரம்பத்தில் இலேசாகக் கேட்கிறது. தொழுகை இரண்டாம் ரக்அத்துக்கும் செல்கிறது. ஹோர்ன் சப்தம் விட்ட பாடில்லை. தொடர்ந்தும் கேட்கிறது, இப்போது அது காதைப் பிளக்குமளவுக்கு! தொழுகையில் ஈடுபட்டிருந்த பலருக்கு இது இடைஞ்சலாகவும் அதே நேரம் தொழுகையைக் கெடுக்குமளவுக்கு கோபமூட்டுவதாகவும் இருந்தது. ஆனால், எனக்கோ, 'தொழுகை முடிந்தவுடன் இனக்கலவரமொன்று ஆரம்பிக்குமோ?' என்று ஒரு வித பயம்.

பீ...........ப், பீ....ப், பீ...............ப்.  ஹோர்னின் சப்தம் அதிகரிக்கிறது. "யாராவது எழுந்து சென்று பஸ் சாரதிக்கு அடித்து விடுவார்களோ?!, வீண் சண்டை மூளுமோ?!, பஸ் சேவை இடை நிறுத்தப்படலாமோ?!" என்ற கேள்விகள் என் மனதில். "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்". தொழுகை முடிகிறது. என் மனம் 'படக், படக்' என அடிக்கிறது. நானும் ஸலாம் கொடுக்கிறேன்.

திடீரென இமாமவர்கள் எழுந்து, "யாரும் கோபப்படவோ, ஆத்திரப் படவோ வேண்டாம். இது நாம் செய்த பிழை. வீதிக்குக் குறுக்காக நமது வாகனத்தை நிறுத்தி வைத்தால், ஏனையோர் எப்படி அதில் போவார்கள்? எமது பிழையை நாம்தான் திருத்திக் கொள்ள வேண்டும். தயவு செய்து வாகன உரிமையாளர் உடனே போய் தமது வாகனத்தை வீதியிலிருந்து அகற்றுங்கள்" என்று மிகவும் பண்பாகவும் அதே நேரம் உரிமையுடனும் கூறினார். இதே கருத்தில் ஹனிபா ஹாஜியார் அவர்களும் சற்று காரசாரமாக கூறியதுடன், வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அகற்றி, பஸ் வண்டிக்கு வழி விடப்பட்டது.

இமாமவர்களினதும் ஹனிபா ஹாஜியார் போன்றோரினதும் சமயோசித நடவடிக்கை காரணமாக ஒரு தவறு திருத்தப்பட்டதுடன் ஒரு பதற்ற நிலையும் தவிர்க்கப் பட்டது.

பிழையை சுட்டிக்காட்டி திருத்த நடவடிக்கை எடுத்த இமாமவர்களும், இமாமின் அறிவுறுத்தலுக்கமைய நடந்து கலவரம் தவிர்த்த எமது சகோதரர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

இந்த செய்தியை வழங்கிய ஓகொடபொள சகோதரருக்கு எமது நன்றிகள்.

1 கருத்து:

  1. காக்காக் கதையை காப்பியடிச்சி போட்டீங்க.. கலவரக் கதை கற்பனையா...?

    பதிலளிநீக்கு