ஞாயிறு, 11 டிசம்பர், 2011

9A சித்தி பெற்ற 9 மாணவர்களுக்கு இலவச உம்றா யாத்திரை!

கடந்த 2010 ஆம் வருட ஜீ.சீ.ஈ. (சா/த) பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் 'A' சித்தி பெற்ற ஒன்பது மாணவர்களுக்கு இலவசமாக புனித உம்றா யாத்திரைக்குச் செல்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கத்தின் ஏற்பாட்டில், இன்று கொழும்பில் இடம்பெற்ற, '9A' சித்தி பெற்ற முஸ்லிம் மாணவர்களுக்கான பாராட்டு விழாவின் போதே இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வருட O/L பரீட்சையில், நாடளாவிய ரீதியில் '9A' சித்தி பெற்ற 105 மாணவர்களுள் நான்கு மாணவர்களுக்கு புனித உம்றா யாத்திரை செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கும் ஏற்பாட்டுடன் நடைபெற்ற இந்த விழா முடிவுறும் தறுவாயில், மேலும் ஐவருக்கு இந்த நல்ல சந்தர்ப்பத்தை வழங்க புதிய அனுசரணையாளர்கள் முன்வந்தனர்.

இந்த நிகழ்ச்சி, இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நேரடியாக ஒலிபரப்பப்பட்டது. வானொலியில் இந்த நிகழ்வுகளை கேட்டுக்கொண்டிருந்த ஒரு பரோபகாரி, உடனடியாக முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கத்துடன் தொடர்பு கொண்டு, தானும் இரண்டு பேரை உம்ராவுக்கு அனுப்பும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.. இது இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முத்தாய்ப்பாய் அமைந்தது.

வானொலியில் இந்த நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு, 'முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்துக்கு சிறந்த ஒரு ஆரம்பம் இடப்பட்டிருக்கிறது' என்ற நிறைவான உளத்திருப்தி ஏற்பட்டது. இந்த ஆரம்பம், சறுக்காமல் தொடர வேண்டும் என்று மனப்பூர்வமாகப் பிரார்த்திப்பதுடன், இந்த நிகழ்ச்சியை சிறப்புற நடத்திய அனைவருக்கும் எமது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ரஹ்மானே, முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கத்தின் முயற்சிகளை ஏற்று, அவற்றுக்கு வெற்றிகளையும் அளிப்பாயாக.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக