புதன், 13 ஜூன், 2012

முஸ்லிம்களும் அழகியற் கலைகளும்



மனிதன் அறிவும் உணர்வு களும் உடையவனாகப் படைக்கப்பட்டுள்ளான். அவனது அறிவின் வெளிப்பாடாக அறிவியற் கலைகளும் உணர்வு களின் வெளிப்பாடாக அழகியற் கலைகளும் தோற்றம் பெறலாயின.
 கலையானது காலத்தால் வென்று வாழும் காவியமாக கவினுறு கட்டடமாக பேசும் பொற்சிலையாக இதயத்தைக் கொள்ளை கொள்ளும் இன்னி சையாக உயிர்த்துடிப்புள்ள ஓவியமாக பல்வேறு வடிவங் களில் பரிணமிக்கலாம்.
உலக வரலாற்றிலே விந்தை கள் பல புரிந்த கிரேக்கர், உரோமர், சீனர், இந்தியர், பண்டை எகிப்தியர் போன்று முஸ்லிம்களும் கலைத்துறையிலே தமது முத்திரையைப் பதித்து தமக்கென நிலையான ஓரிடத்தைப் பெற்றிருக்கின்றனர். பண்டைய கலைகள் பலவற்றுக்கு அவர்கள் புதுமெருகூட்டினர். புதிய கலைகளை உலகிற்கு அளித்தனர்.
இஸ்லாம் மனித மிருக உருவங்களை வரைவதை வரவேற்காமையாலும் சிலைகளாக வடிப்பதைத் தடைசெய்வதனாலும் முஸ்லிம்கள் அதிக அளவிற்கு அரபு எழுத்தணிக் கலையிலும், அலங்கார வேலைப்பாட்டுக் கலையிலும், அழகிய கட்டடங்களை அமைப்பதிலும் பிற நுண் கலைகளிலும் தமது கவனத்தைச் செலுத்தலாயினர். இஸ்லாம் சில வரையறைகளோடு அங்கீகரித்த ஓவியம் இசைபோன்ற கலைகள் அவ்வரையறைகளையும் தாண்டி வளர்ச்சியடைந்ததைக் கண முடிகின்றது-
அல்லாஹ் அழகானவன். அவன் அழகை விரும்புகிறான் என்னும் ஹதீஸ் கவின்கலை பற்றிய இஸ்லாமிய எண்ணக் கருவுக்கு ஆதாரமாக விளங்குகின்றது.

மக்கா வெற்றியைத் தொடர்ந்து முகம்மது நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி கஃபாவில் இருந்த சிலைகளும், வரைந்திருந்த அலங்காரங்களும் அழிக்கப்பட்டன. ஏக தெய்வக் கொள்கையை நிலை நிறுத்தும் இஸ்லாம் ஓவியத்தையும், சிற்பக் கலையையும் முற்று முழுதாக நிரந்தரமாகத் தடைசெய்தது.
இஸ்லாமிய கலாசாரம் மானிட வாழ்வின் துணைப் பொருள்களை அழகுபடுத்துவதையோ தூய்மையாக்குவதையோ நோக்கமாகக்கொண்டதல்ல. மனித வாழ்வை அழகுபடுத்துவதையும் உயர்த்துவதையுமே இலக்காகக் கொண்டதாகும் என்று பிக்தால் என்னும் அறிஞர் குறிப்பிடுகிறார்.
இதனால் கருத்துப் பொருட்கலை வடிவங்களில் ஈடுபடலாயினர். பேராசிரியர் இஸ்தியாக் ஹுஸைன் குறைஷி கூறுவது போல ‘வேறெந்தக் கலையையும் விடப் பூரணத்துவமும் முழுமையும் வாய்ந்த கருத்துப் பெருட் கலையாக அரபு எழுத்தாணிக் கலை இருந்தமையால் முஸ்லிம்கள் தமது கலை வெளிப்பாட்டு வடிவின் அடிப்படை ஊடகமாக அதனைத் தெரிந்தெடுத்தனர்.
அலங்கார வேலைப்பாடு களுக்காக அரபு எழுத்துக்களைப் பயன்படுத்துவதே அரபெஸ்க் என வழங்கப்படுகின்றது. கேத்திர கணித அடிப்படையில் அமைந்த கோடுகள், மலர்கள் பழங்கள் என்பனவும் அரபெஸ்க் அலங்கார வேலைப்பாடுகளுக்காகக் கையாளப்படுகின்றன. மஸ்ஜிதுகள், மாளிகைகள், பொது மண்டபங்கள், மினராக்கள், களியலறைகள் போன்றவற்றை அழகுபடுத்தவும் இவ்வலங்கார முறைகள் கையாளப்பட்டன. அந்த லூசியாவிலுள்ள அல் ஹம்ரா மாளிகை இதற்குச் சிறந்த உதாரணமாகும்.
அரபு எழுத்தணிக் கலை
அரபு எழுத்துக்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாகும். அல்குர் ஆனினாலும் ஸ¤ன்னாவினா லும் தூண்டப்பட்ட ஒரு கலையாகவும் இது விளங்குகின்றது.
மெஸபதோமியாவிலிருந்த குறைஷியர்களால் கைக்கொள்ளப்பட்ட கூபி என்னும் எழுத்து வடிவமே உமையாக்கள் அப்பாஸியர் காலப் பிரிவு வரை பயன்படுத்தப்பட்டது. இவ்வெழுத்து முறையைப் பின்பற்றியே இவ்விரு காலப் பிரிவுகளிலும் முஸ்ஹப்புகளும், மார்க்க நூல்களும் எழுதப்பட்டன.
மனிதன் பெற்றுள்ள அழகுணர்வே அழகுக் கலைகளுக்கு அடிப்படையாகும். அவ்வழகுக் கலைகளில் சிற்பக் கலையை இஸ்லாம் முற்றாகத் தடை செய்கிறது. ஓவியம் இசை ஆகியவைகளின் வெளிப்பாட்டு எல்லைகளை வரையறை செய்கின்றது.
கட்டடக் கலையானது கலாசாரச் செல்வாக்குகளினூடாகத் தோன்றி வளர்ந்து இஸ்லாமியக் கட்டடக் கலை’ என்ற கலை மரபொன்றின் தோற்றத்துக்குக் காரணமாக அமைந்தது. இக் கலைகள் உமையாக்கள், அப்பாஸியாக்கள் காலங்களில் மட்டுமன்றி ஸெல்ஜுக்கியர் மொங்கோலியர் உதுமானியர், மொகலாயர் காலங்களிலும் போற்றி வளர்க்கப்பட்டு வந்துள்ளன.
இந்தியா, ஈரான், எகிப்து முஸ்லிம் ஸ்பெயின், வட ஆபிரிக்கா, துருக்கி, சிரியா என்பன இக்கலைகள் வளர்க்கப்பட்ட பிரதான நாடுகளாகும். ஓவியம், எழுத்தணி, கட்டடக் கலை என்பன கால, சூழல் தேவைகளின் அடிப்படையில் புதுபுது மாறுதல்களுடன் இன்றும் வளர்ந்தும் வளர்க்கப்பட்டும் வருகின்றன.

எம். எம். ஆதம்பாவா (தொலைக்கல்வி சிரேஷ்ட போதனாசிரியர்)
சாய்ந்தமருது – 8

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக