ஞாயிறு, 24 ஜூன், 2012

கலீபா வலீத் இப்னு அப்துல் மலிக் (86 - 96 / 705 - 715)

உமையாக் கலீபா அப்துல் மலைக் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது தனயன்  வலீத் இப்னு அப்துல் மலிக் உமைய கிலாபத்தின் கலீபாவானார். இவ்ரது ஆட்சியின்போது உமையாக்களின் ஆட்சி உச்ச நிலையை எய்தியது. கலீபா உமர் (ரழி) அவ்ர்களின் ஆட்சியின் பின் இவரது ஆட்சியில் தவிர வேறு எவரது ஆட்சியிலும் இஸ்லாமியப் பேரரசு இந்த அளவுக்கு வேகமாய் விரிவடையவில்லை. உமைய கலீபாக்கள் வரிசையில் மிகச் சக்தி வாய்ந்தவராகவும் உயர்ந்தவராகவும் விளங்கிய இவர், உமைய அரசியல் வரலாற்றில் ஒளிமயமான அத்தியாயமொன்றை உருவாக்கினார்.


கலீபா அப்துல் மலிக்கின் காலத்தில் கிலாபத்தில் அமைதி நிலை உருவாக்கப்பட்டிருந்தமையால் கலீபா வலீதின் காலத்தில் நாட்டின் அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்தக்கூடிய வாய்ப்புக் கிட்டியது. கிணறுகள் வெட்டப்பட்டன. வைத்திய சாலைகளும் பாடசாலைகளும் தாபிக்கப்பட்டன. கஷ்டப்படுகின்ற அநாதைகள், ஏழைகள், விதவைகள், நோயாளிகள் முதலானோருக்கு சகாய நிதி வழங்கப்பட்டது. அநாதைகள், செவிடர், குருடர் மனநோயாளர் ஆகியோருக்கு விடுதி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. கைத்தொழில் மற்றும் விவசாய முயற்சிக்கு ஊக்கமளிக்கப்பட்டது. கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டன. இன்று வரையும்  உலகில் புகழ் பெற்ற மஸ்ஜிதுகளுள் ஒன்றாகக் கருதப்படும் "டமஸ்கஸ் ஜாமிஆ" மஸ்ஜிதும் கலீபா வலீதாலேயே நிருமாணிக்கப்பட்டது. மதீனா, ஜெரூஸலம் ஆகிய இரு நகர மஸ்ஜித்களையும் இவர் விரிவுபடுத்தினார். நகரங்கள் தோறும் மஸ்ஜித்கள் அமைக்கப்பட்டன. கலீபாவே நேரடியாகச் சந்தைகளுக்குச் சென்று பொருட்களின் விலையை  அவதானித்து நியாய விலையமைப்பொன்றை ஏற்படுத்தினார். வர்த்தகம், கைத்தொழில் முதலாம் அம்சங்கள் வளர்ச்சி கண்டதைப் போன்றே கலை, கலாசாரம், இலக்கியம் போன்றனவும் வளர்ச்சியுற்றன. உமர் இப்னு அப்துல் அஸீஸை ஹிஜாஸின் கவர்னராக நியமித்ததன் மூலம் ஹிஜாஸின் எதிர்ப்புக்கள் முறியடிக்கப்பட்டு ஆதரவு கிடைத்தது.

கலீபா வலீதின் ஆட்சி சிறப்புப் பெற அவரது தளபதிகளான ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃப், மூஸா இப்னு நுஸைர், குதைபா இப்னு முஸ்லிம், முஹம்மத் இப்னு காஸிம் முதலானோர் துணை நின்றனர். அத்துடன், கலீபா வலீதின் தனித் திறமையும்,அரசியல் ஞானமும், அவருக்குக் கிடைக்கப்பெற்ற நிர்வாகிகள், தளபதிகள் முதலானோரின் ஒத்துழைப்பும் அவரது ஆட்சியை மேம்படுத்தின. மேலும், கலீபா வலீத் தனதாட்சியில் வாரிசுரிமைப் பிரச்சினையையோ, ஷீஆ, கவாரிஜ் போன்ற இயக்கங்களின் எதிர்ப்புக்களையோ சந்திக்கவில்லை. அப்துல்லஹ் இப்னு ஸுபைர் கலீபா அப்துல் மலிக்கின் காலத்திலேயே மறைந்ததனால் கிலாபத்தில் பிரிவுகள் கூட நீங்கின. உள்நாட்டில் அமைதியும், வெளிநாட்டு அச்சுறுத்தல்களின்மையும் வலீதின் ஆட்சி நல்லாட்சியாக அமைய வழிவகுத்தன. இத்துணை சிறப்புக்கள் மிகு ஆட்சியை வரலாற்றாசிரியர்கள் உமையாக் கிலாபத்தின் பொற்காலம் எனக் குறிப்பிடுகின்றனர்.

வலீதின் ஆட்சியின் போது பரந்ததொரு பிரதேசம் உமைய ஆட்சிக்குள் கொண்டு வரப்பட்டது. மேற்கே ஸ்பானியா முதல் கிழக்கே சீனா வரையும் வடக்கே ரஷ்யா முதல் தெற்கே இந்தியா வரையுமான பரந்ததொரு நிலப்பரப்பில் உமையப் பேரரசு உருவானது. குதைபா பின் முஸ்லிம் என்ற தளபதியால் மத்திய ஆசியா வெற்றி கொள்ளப்பட்டது.

சிந்துப் பிரதேசத்தில் கொள்ளையர்கள் மேற்கொண்ட தாக்குதல்களும், இலங்கை மன்னனால் உமைய கலீபாவுக்கு 8 கப்பல்களில் அனுப்பப்பட்ட அன்பளிப்புப் பொருட்கள் தேபல் துறைமுகத்தில் வைத்துக் கொள்ளையிடப்பட்ட நிகழ்ச்சியுமே இந்தியா மீது படையெடுக்கத் தூண்டுகோலாக அமைந்தன. இப்படையெடுப்புக்கு 16 வயது நிரம்பிய முஹம்மத் இப்னு காஸிம் என்பவர் தளபதியாக நியமிக்கப்பட்டார். முஹம்மத் பின் காஸிமின் தலைமையின் கீழ் சிந்துப் பிரதேசம் கைப்பற்றப்பட்டது.

வட ஆபிரிக்காவில் கவர்னர் மூஸா பின் நுஸைரால் பர்பர்களின்  குழப்பங்கள் அடக்கப்பட்டன. மத்தியதரைக் கடலில் உரோமர்கள் முஸ்லிம்களை அடிக்கடி தாக்கி வந்தனர். அவர்களை அடக்குவதற்குக் கடற்படை அங்கு அனுப்பப்பட்டு பல தீவுகள் வெற்றி கொள்ளப்பட்டன. இதனால் முஸ்லிம்களின் மேற்குலகிற்கான கடல்-வழி வர்த்தகம் சிறப்புற்றது.

மேலும், ஐரோப்பாவில் ஸ்பெயின் பிரதேசத்தின்  கத்தோலிக்க மன்னனும் மத குருக்களும் யூதர்களை இம்சைப்படுத்தினர். கத்தோலிக்க மதத்தைத் தழுவாத யூதர்கள் கொலை செய்யப்பட்டனர். மத்திய தர வர்க்கத்தார் மீது நியாயமற்ற வரிகள் சுமத்தப்பட்டன. இக்கொடுமைகளைச் சகிக்க முடியாதோர் வட ஆபிரிக்காவில் வாழ்ந்த முஸ்லிம்களிடம் தஞ்சம் புகுந்து, இக்கொடுமைகளுக்கு முடிவு காணுமாறு கவர்னர் மூஸா பின் நுஸைரிடம் வேண்டினர். நீண்ட ஆலோசனையின் பின் கலீபா வலீதின் அனுமதியுடன் இளம் தளபதி தாரிக் பின் ஸியாதின் தலைமையில் 7 000 படை வீரர்கள் அங்கு அனுப்பப்பட்டனர். தளபதி தாரிக் ஸ்பெயினில் குன்றொன்றில் இறங்கினார். இன்றும் அக்குன்று தளபதி தாரிக்கின் ஞாபகார்த்தமாக 'ஜிப்ரோல்டர்"' (ஜபல் அத்தாரிக் - தாரிகின் மலை) என அழைக்கப்படுகிறது. இவ்வாறு தளபதி தாரிக் ஐரோப்பாவின் வட பகுதி நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். தாரிக்கின் வெற்றிகளைப் பற்றிக் கேள்விப்பட்ட கவர்னர் மூஸா இப்னு நுஸைர் வெற்றியில் தானும் பங்கு கொள்ள வேண்டுமென்பதற்காகப் பெரும் படையுடன் ஸ்பெயின் வந்தடைந்தார். இருவருமாக ஸ்பெயினின் வடகிழக்கு மாகாணமான அரகோன் நோக்கி முன்னேறி பிரனீஸ் மலைத்தொடர் வரையும் சென்றனர். சுமார் 2 1/2 வருட காலத்தில் முழு ஸ்பெயினும் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் வந்தது. சில ஆண்டுகளின் பின் போர்த்துக்கல் தேசமும் வெற்றி கொள்ளப்பட்டது.

மூஸா முழு ஐரோப்பாக் கண்டத்தையும் வெற்றி கொள்ள விரும்பினார். எனினும், கலீபா வலீத் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அன்றைய ஐரோப்பாவில் பலம் வாய்ந்த எந்தத் தலைவருமிருக்கவில்லை. கலீபா வலீத்  மட்டும் அன்று தளபதி தாரிக்கிற்கு அனுமதி வழங்கியிருந்தால் ஐரோப்பாவின் தலை விதியே வேறு விதமாக மாறியிருக்கும்.

கலீபா வலீதின் வேண்டுகோளின்படி தாரிக் பின் ஸியாதும் மூஸா பின் நுஸைரும் டமஸ்கஸ் திரும்பவேண்டி ஏற்பட்டது. இருவரும் டமஸ்கஸ் திரும்பியபோது மரணப் படுக்கையில் இருந்த கலீபா வலீத் சில நாட்களின் பின்னர் ஹிஜ்ரி 96ல் மரண்மடைந்தார்.

உமையா ஆட்சியின் பொற்காலம் எனக் குறிப்பிடப்படும் இவரது ஆட்சி, பல வகையிலும் சிறப்புற்று விளங்கியது. கிழக்கே சீனாவின் எல்லை முதல் மேற்கே பிரினீஸ் மலைத் தொடர் வரையிலும்; வடக்கே கௌகாஸ் மலைத் தொடர் முதல் தெற்கே அரபுக் கடல் வரையிலும் இவரது ஆட்சிக் காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யம் விரிவடைந்திருந்தது. மேற்குலகில் இஸ்லாம் அறிமுகமாவதற்கும், அதன் கலாசார பண்பாட்டுப் பெறுமாணங்கள் ஐரோப்பாவைச்சென்றடைவதற்கும் ஸ்பெய்ன் கைப்பற்றப்பட்டமையே முக்கிய காரணமாய் அமைந்தது.



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக