திங்கள், 8 ஆகஸ்ட், 2011

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள்


பிறப்பு முதல் நபித்துவம் வரை

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள், நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் பரம்பரையில் பிறந்தவர்களாவர். இது பற்றி நபியவர்களே இவ்வாறு கூறியுள்ளார்கள்.
"நிச்சயமாக அல்லாஹ் இப்றாஹீமின் புதல்வர்களுள் இஸ்மாயீலைத் தேர்ந்தெடுத்தான் ; இஸ்மாயீலின் சந்ததிகளுள் கினானாவைத் தேர்ந்தெடுத்தான் ; கினானாவின் சந்ததிகளுள் குறைஷைத் தேர்ந்தெடுத்தான் ; குறைஷியருள் பனூ ஹாஷிமைத் தேர்ந்தெடுத்தான் ; பனூ ஹாஷிமுள் என்னைத் தேர்ந்தெடுத்தான். (ஸஹீஹ் முஸ்லிம்)

பிறப்பு

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் யானை ஆண்டு (ஆமுல் ஃபீல்) றபீஉல் அவ்வல் மாதம் பிறை 12 திங்கட்கிழமை அதிகாலை மக்கா நகரில் பிறந்தார்கள். இது கி.பி.571 ஏப்ரல் 22ம் திகதி எனக் கணிக்கப்படுகிறது.

நபியவர்களின் தந்தை பெயர் அப்துல்லாஹ் ; தாயர் ஆமினா. இவர்கள் இருவரும் ஒரே பரம்பரையைச் சேர்ந்தவர்களாவர்.

இர்ஹாஸாத்

நபியவர்கள் பிறப்பதற்கு முன்னரும் பிறக்கும் பொழுதும் பொழுதும் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. நபிமார்களுக்கு நபித்துவம் வழங்கப்பட முன்னர் நடைபெறும் அற்புதங்கள் 'இர்ஹாஸாத்' என்று அறபு மொழியில் குறிப்பிடப்படுகின்றன. அதன்படி நபியவர்களுக்கு காணப்பட்ட 'இர்ஹாஸாத்'கள் பின்வருமாறு:
1. ஆப்ரஹாவின் யானைப் படை அபாபீல் எனும் சிறிய பறவைகளால் முறியடிக்கப்பட்டமை. (அல் குர்-ஆன் 105 : 01-05)
2. வானத்தை நெருங்கும் ஜின்கள் விண்கற்களால் தாக்கப்பட்டமை. (அல் குர்-ஆன் 72 :08-09)
3. நபியவர்கள் பிறக்கும் போது அவர்களுடன் பிரகாசமான ஓர் ஓளி வெளிவந்தமை. (ஷுர்ஹுஸ் ஸுன்னா, முஸ்னத் அஹ்மத்)
4. அவர்கள் பிறந்த வேளை பாரசீக மன்னனின் அரண்மனையில் 14 அறைகள் இடிந்து விழுந்தமை. (தலாயிலுன்னுபுவ்வா)
5. ஈரானின் வடக்கே அமைந்துள்ள ஸாவா நகரத்திலிருந்த கோயில்கள் இடிந்தமை. (தலாயிலுன்னுபுவ்வா)
6. 'ஸாவா'வில் இருந்த வற்றாத வாவி வற்றியமை. (தலாயிலுன்னுபுவ்வா)
7. நபியவர்களுக்குப் பால் கொடுக்கத் தொடங்கியதும் ஹலீமா அவர்களின் மார்பில் பால் சுரந்தமை. (சீறா இப்னு ஹிஷாம்)

தந்தையின் மரணம்

யானை ஆண்டிற்கு ஓர் ஆண்டிற்கு முன்னரே நபியவர்களின் பெற்றோரான அப்துல்லாஹ் ஆமினா ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. நபியவர்கள் பிறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன் அப்துல்லாஹ் யத்ரிபில் மரணமடைந்தார். அவர் மரணமடையும் போது 5 ஒட்டகைகள், சில ஆடுகள், 'உம்மு அய்மன்' என்ற அபிஸீனிய அடிமைப் பெண் ஆகியவற்றையே அனந்தரமாக விட்டுச் சென்றார்.

குழந்தைப் பருவம்

நபியவர்கள் பிறந்தது முதல் சில நாட்கள் அவர்களின் தாயாரே அவர்களுக்குப் பாலூட்டி வந்தார்கள். பின்னர் கிராமத்துப் பெண்ணான ஹலீமதுஸ் ஸஃதியா அவர்கள் பாலூட்டி வளர்த்தார்கள்.

கிராமப் புறங்களில் தூய மொழி பேசப்படுவதாலும் தொற்று நோய்கள் குறைவாகையாலும் தூய காற்றுப் போன்ற இயற்கையான சுகாதார வசதிகள் இருந்தமையாலும் திடகாத்திரமான உடற்கட்டு ஏற்பட வாய்ப்புண்டாகையாலும் வளர்ப்பதற்காகக் குழந்தைகளைக் கிராமப்புறப் பெண்களிடம் கொடுப்பது அக்கால வழக்கமாகும். இதன்படியே நபியவர்களும் ஹலீமா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். நபியவர்களை ஹலீமா அவர்கள் கையேற்க முன்னரே அபூல்லஹபின் அடிமைப் பெண்ணான துவைபதுல் அஸ்லமியாவும் அவர்களுக்குப் பாலூட்டினார்கள்.

நபியவர்கள் பெற்றோரின் ஏக புதல்வராகையால் அவர்களுக்கு உடன் பிறந்த சகோதரர்கள் இல்லை. ஆயினும் ஹலீமா, துவைபா ஆகிய இருவர் மூலமும் பால் குடிச் சகோதரர்கள் இருந்தனர்.

நபியவர்களை வளர்க்கக் கொண்டு வந்ததிலிருந்து ஹலீமா அவர்களின் வறிய வாழ்வு செழிப்புற்றது. எனவே, அவர்கள் தம் மக்களை விட நபியவர்கள் மீதே அதிக அன்பு செலுத்தினார்கள்.

குழந்தைக்கு இரண்டு வயதான போது அதைத் தாயாரிடம் சேர்ப்பதற்காக ஹலீமா அவர்கள் மக்காவிற்குக் கொண்டு வந்தார்கள். தம் உள்ளத்தில் உயரிய இடத்தைப் பிடித்துக் கொண்ட அக்குழந்தையைப் பிரிவது ஹலீமா அவர்களுக்குச் சொல்லொணாத் துயரத்தைக் ஏற்படுத்தினாலும் குழந்தையைத் தாயாரிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கிருந்தது.

தன் சின்னஞ்சிறு மழலையைக் கண்டதனால் ஆமினா அவர்கள் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தார்கள். எனினும், மக்காவில் அப்பொழுது தொற்று நோய் பரவியிருந்தமையால் குழந்தையை ஹலீமா அவர்களிடம் மீண்டும் கிராமத்துக்கே அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதனால் ஹலீமா அவர்கள் ஆனந்த வெள்ளத்தில் மிதந்தார்கள்.

நபியவர்கள் தமது நாங்காம் வயதில் ஒரு முறை சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வருகை தந்து, அவர்களை நிலத்தில் அண்ணார்ந்து படுக்க வைத்து அவர்களது மார்பகத்தைப் பிளந்து இதயத்தை எடுத்து அதிலிருந்த 'அலகா' எனும் சதைத்துண்டை அகற்றி விட்டு அத்துண்டைச் சுட்டிக்காட்டி "இது ஷைத்தானின் பகுதி" என்று கூறினார்கள். தொடர்ந்து இதயத்தைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்து 'ஸம் ஸம்' நீரினால் கழுவிய பின்னர் அதை மார்பில் பொருத்தி பழைய நிலையிலேயே வைத்தார்கள். அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் வளர்ப்புத் தாயிடம் ஓடி வந்து நபியவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டதாகக் கூறீனர். அவர்கள் எல்லோரும் அங்கு வந்து பார்த்த போது நபியவர்கள் நிறம் பேதலித்த நிலையில் இருந்தார்கள். இந்நிகழ்ச்சியை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்கள்.

 
நபியவர்களின் இதயம் அவர்களின் வாழ்நாளிலேயே இரண்டு முறை மலக்குகளினால் சுத்திகரிக்கப்பட்டிருப்பதை ஸுன்னாவில் இருந்து அறிய முடிகின்றது. மேற்கண்ட நிகழ்ச்சியினால் அதிர்ச்சியடைந்த ஹலீமா அவர்கள் எதிர்காலத்தில் குழந்தைக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சினார்கள். எனவே, குழந்தையைத் தாயாரிடம் ஒப்படைத்தார்கள்.

தாயாரின் மரணம்

மகனின் நாங்காம் வயதில் அவரைப் பொறுப்பேற்றுக் கொண்ட தாயார் ஆமினா அவர்கள், கணவனின் கப்றைத் தரிசிக்க எண்ணி தன் மகனோடும் அடிமைப் பெண்ணோடும் யத்ரிப் சென்றார்கள். பின்னர் அங்கிருந்து மக்கா திரும்பும் வழியில் அப்வா எனுமிடத்தில் அவர்கள் மரண்மடைந்தார்கள். அப்போது நபியவர்களுக்கு வயது ஆறு.

தாயாரின் மரணத்தையடுத்து நபியவர்களை அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரோ தனது பேரப்பிள்ளையைக் கண்ணெனப் போற்றி வந்தார். தனக்கென விரிக்கப்படும் கம்பளத்தில்  தனது மக்கள் கூட உட்காருவதில்லையாயினும் தனது பேரப்பிள்ளை அதில் உட்காருவதை அவர் விரும்பினார். தனது முதுமையையும் இயலாமையையும் அறிந்த அப்துல்  முத்தலிப் தனக்குப் பின்னர் தன்னருமைப் பேரனை தனது மகனும் அப்துல்லாஹ்வின் சகோதரருமான அபூதாலிபைத் தெரிவு செய்திருந்தார். நபியவர்களின் 8ம் வயதில், அப்துல் முத்தலிப் மரணமடைய நபியவர்களை அபூதாலிப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அபூதாலிப் நபியவர்களை எதுவித குறையுமின்றிக் கண்ணும் கருத்துமாகப் பேணிப் பாதுகாத்து வந்தார். நபியவர்களின் ஒழுக்க சீலமும் அறிவுக்கூர்மையும் அருள் முகமும் அபூதாலிபை பீரிதும் கவர்ந்தன. தமது திருமணம் வரை நபியவர்கள் அபூதாலிபிடமே இருந்து வந்தார்கள்.

சிரியாப் பயணம்

அபூதாலிப் நபியவர்களின் 12ம் வயதில் அவர்களை அழைத்துக் கொண்டு வியாபாரத்துக்காக சிரியா சென்றார். வழியில் 'புஸ்றா' என்ற இடத்தை அடைந்த போது அங்கு ஓர் ஆசிரமத்தில் 'புஹைறா' என்ற பாதிரியார் வழமைக்கு மாறாக எழுந்து வந்து வர்த்தகக் குழுவை ஆதரித்து விருந்து வைத்து கௌரவித்தார். நபியவர்களிடம் தென்பட்ட நுபுவ்வத்தின் அடையாளங்களை இனங்கண்டு அவர்களின் கரத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டு, 'இவரே உலகத் தலைவர் ; இவரை உலகோர்க்கு அருட்கொடையாக அல்லாஹ் நியமிப்பான்' என்று கூறினார். பின்னர் நபியவர்களை சிரியா செல்லவிடாது அவ்விடத்திலிருந்து திருப்பி மக்காவுக்கு அனுப்பி வைத்தார்.

இச்சந்திப்பின் போது 'புஹைறா' அவர்கள் அல்குர்-ஆன் முழுவதையும் நபியவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாக கீழைத்தேச ஆய்வாளர்கள் சிலர் கூறுவர். இவ்வரிசையில் 'அல்குர்-ஆனின் ஆசிரியன்' என்ற பெயரில் நூல் ஒன்று எழுதப்பட்டு இக்கூற்றை நிறுவ பகீதரப் பிரயத்தனம் செய்யப்பட்டுள்ளது. இது அப்பட்டமான பொய் என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை.

புஹைறா ஓர் அஜமி. அவரது கல்வி நிலை பற்றித் தெரியவில்லை. நபியவர்களோ சிறுவர். சந்திப்பு இடம்பெற்ற நேரமோ மிகக் கொஞ்சம். பயணக் களைப்பு வேறு. கல்வியறிவு அறவே அற்ற ஒருவர் தமது 12ம் வயதில் ஒரு சில நேரத்தில் கற்ற அனைத்தையும் நாற்பது வயது வரை இதயத்தில் அடக்கி வைத்திருந்து சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு நெறிப்படுத்தி வழங்குவது இயலாத காரியமல்லவா, அத்துடன் நம்பிக்கைக்குரியவர்,  உண்மையாளர் என்றெல்லாம் போற்றிய குறைஷியர்  விட்டுவைப்பரோ, எனவே இக்கூற்று எவ்வகையிலும் ஏற்க முடியாத ஒன்றாகும்.

ஹர்புல் புஜ்ஜார்

  ஹறம் புண்ணிய பூமிக்குள் அத்துமீறிப் பிரவேசித்தோருக்கு எதிராகப் போர் ஒன்று நடைபெற்றது. இது வரலாற்றில் ஹர்புல் புஜ்ஜார் (தீயோரின் போர்) என அழைக்கப்படுகிறது. இப்போரினால் ஹறமின் கண்ணியமும் சங்கையான நாங்கு மாதங்களில் கண்ணியமும் சிதைக்கப்பட்டதனால் அது இப்பெயர் பெற்றது. இப்போரின் போது நபியவர்களுக்கு வயது 15. இதில் நபியவர்கள் குறைஷியரோர் உதவியாளராகக் கலந்து கொண்டார்களே தவிர ஆயுதமேந்திப் போர் செய்யவில்லை.

ஹில்புல் புழூல்

ஹர்புல் புஜ்ஜாரினால் ஏற்பட்ட பயங்கர விளைவுகள் காரணமாக இதன் பிறகும் இவ்வாறான ஆனர்த்தங்கள் நடைபெறாவண்ணம் கவனித்துக்கொள்ள வேண்டுமென குறைஷித் தலைவர்கள் தீர்மானித்தனர். இதற்காகத் தங்கள் மத்தியில் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். இவ்வொப்பந்தமே ஹில்புல் புழூல் (கனவாங்கள் ஒப்பந்தம்) என அழைக்கப்படுகிறது.

அநீதி இழைக்கப்பட்டோரின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கவும் அவர்களின் நலங்களைப் பாதுகாக்கவுமே இவ்வொப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சுதேசிகளுக்கு மட்டுமன்றி விதேசிகளுக்கும் இதன் சேவை விரிவுபடுத்தப்பட்டிருந்தது. இவ்வொப்பந்தத்தில் நபியவர்களும் பங்குபற்றினார்கள். இச்செயற்பாடு நபியவர்களுக்கிருந்த சமூகப் பற்று, இன ஐக்கியம், அடிப்படை மனித உரிமைகள் பேணப்படுவதில் ஆர்வம் போன்றவட்க்ரைப் பறைசாற்றி நிற்கின்றது.

சீவனோபாயம்

சிறு வயதில் நபியவர்கள் பெற்றோரை இழந்து அநாதையானாலும் அவர்கள் இரந்து வாழப் பழகவில்லை. தமது சிறிய வயதில் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டார்கள். ஹலீமா அவர்களிடம் இருக்கும் போதும் பின்னர் மக்காவிலும் ஆடு மேய்த்ததாக அறிய முடிகின்றது.

ஒரு முறை நபியவர்கள் "அல்லாஹ் எவரையும்  (ஆரம்பத்தில்) ஆடு மேய்க்கும் பயிற்சியை கொடுக்காது நபியாக அனுப்பவில்லை ; என்று கூறிய போது ஸஹாபாக்கள் தாங்களுமா என வினவினார்கள். அதற்கு நபியவர்கள் ஆம், நான் மக்காவாசிகளுக்கு 'கீறாத்' (சிறு தொகைப் பணம்)துக்காக ஆடு மேய்த்துள்ளேன் என கூறினார்கள்". (ஸஹீஹுல் புஹாரி)

நபிமார்களுக்கு அல்லாஹ் ஏன் ஆடு மேய்க்கும் பயிற்சியைக் கொடுத்தான், ஆட்டு மந்தைகளுக்கு இடையன் செய்யும் பணியானது ஒரு கலீபா பிரசைகளுக்கு நிறைவேற்ற வேண்டிய பணிகளுக்கு ஒப்பானதே.

சிறு வயதில் ஆடு மேய்த்த நபியவர்கள் தமது இளமைப் பருவத்தில் குறைஷியரின் பரம்பரைத் தொழிலான வர்த்தகத்தில் ஈடுபட்டார்கள். அவர்களின் வர்த்தகப் பயணங்களில் இரண்டு குறிப்பிடத்தக்கவை. ஒன்று அவர்கள் தமது 12ம் வயதில் சிரியா சென்று இடையில் திரும்பியமை. மற்றொன்று 25ம் வயதில் சிரியா சென்றமை.

இம்முறை நபியவர்கள் அக்காலத்தில் மக்காவில் பெரும் வாணிபம் நடத்தி வந்த பெண்மணி கதீஜா அவர்களின் வர்த்தகப் பங்காளராக சிரியா சென்றார்கள். கதீஜா அவர்களின் சார்பில் அவர்களது அடிமை மைசறா என்பவர் நபியவர்களுடன் சென்றார்.

திருமணம்

கதீஜா அவர்கள் குறைஷிக் குலத்தவர் ; பண்பாளர் ; ஒழுக்கமுடையவர் ; பெருந்தன்மையும் தாராள மனமும் படைத்தவர் ; சீமாட்டி ; குணவதி ; அழகி ; விதவை. கணவனை இழந்த பின்னர் அவர்களுடன் இல்லற வாழ்க்கை நடத்த உயர் குலப் பிரபுக்களெல்லாம் போட்டியிட்டும் அவர்கள் அதைப் புறக்கணித்து வந்தார்கள்.

அதேவேளை தனது நற்குண நல்லொழுக்கத்தாலும் நாணய நம்பிக்கையாலும் 'அல் அமீன்' (நம்பிக்கைக்குரியவர்), 'அஸ்ஸாதிக்' (உண்மையாளர்) என்று பாராட்டப்பெற்ற நபியவர்களின் பண்புகள் கதீஜா அவர்களைப் பெரிதும் கவர்ந்தன. இவ்வாறான ஒருவரே தனக்குப் பொருத்தமான கணவர் என்று கதீஜா அவர்கள் தீர்மானித்தார்கள். அன்றைய வழக்கப்படி திருமணப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நபியவர்களின் தந்தையின் உடன்பிறப்புக்களான அபூதாலிப் மற்றும் பிற சகோதரர்களின் நல்லாசியுடன் திருமணம் நடந்தேறியது.

திருமணத்தின் போது நபியவர்களின் வயது 25, கதீஜா அவர்களின் வயதோ 40. திருமணத்தின் பின்னர் நபியவர்கள் வர்த்தகத்தில் நேரடியாக ஈடுபடவில்லை. கதீஜா அவர்கள் தனது சொத்துக்களை நபியவர்களின் விருப்பத்திற்குச் செலவு செய்ய அனுமதி வழங்கினார்கள்.

நபியவர்களும் கதீஜா அவர்களும் சுமார் 25 வருடங்கள் இல்லறம் நடத்தினார்கள். இவர்களுக்கு  ஆறு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களுள் ஸைனப், றுகையா, உம்முகுல்ஸூம், பாத்திமா என்று நாங்கு பெண் பிள்ளைகளும் அல்காசிம், அப்துல்லாஹ் என்று இரண்டு ஆண் பிள்ளைகளும் பிறந்தனர். இவர்களைத் தவிர நபியவர்களுக்கு ஈகிப்தியப் பெண்ணான மாரியதுல் கிப்தியா அவர்கள் மூலம் இப்றாஹீம் என்ற குழந்தையும் பிறந்தது.

கஃபா புனர் நிர்மாணம்

நபியவர்களின் முப்பத்தைந்தாம் வயதில் நடைபெற்றதொரு நிகழ்ச்சி அவர்களின் மதி நுட்பத்தையும் சமாதான வேட்கையையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

அப்பொழுது குறைச்ஷியர் கஃபாவைப் புதுப்பித்துக் கட்டினர். கட்டட வேலை துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, ஹஜறுல் அஸ்வத் கல்லை கஃபாவின் சுவரில் பதிக்க வேண்டிய சந்தர்ப்பம் வந்தது. அக்கல்லைத் தூக்கி உரிய இடத்தில் வைப்பவர் யார், என்ற  கேள்வி எழுந்தது. எல்லா கபீலாக்களும் அவ்வுரிமை தமக்கே வேண்டுமென வாதாடின. இதனால் சில நாட்கள் வேலை ஸ்தம்பித்துவிட்டது. யுத்தம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் கூடத் தென்பட்டன..  ஈற்றில் மறுநாள் அதிகாலி ம்ஸ்ஜிதுல் ஹறாமில் முதன் முதல் நுழைபவருக்கே அவ்வுரிமை என்று தீர்மானிக்கப்பட்டது. மறுநாள் வைகறையில் முதன் முதலில் மஸ்ஜிதில் நுழையும் பேற்றை நபியவர்கள் பெற்றார்கள். அதனால் ஹஜருல் அஸ்வத் கல்லை கஃபாவில் வைக்கும் பேற்றை நபியவர்கள் பெற்றார்கள்.

நபியவர்கள் தமது மேலங்கியை விரித்து அதன் மீது ஹஜருல் அஸ்வத் கல்லைத் தூக்கி வைத்து எல்லா கபீலாக்களின் ஷெய்குகளையும் வைத்து அத்துணியின் நாலா பக்கங்களிலும் பிடித்து உயர்த்துமாறு அவர்களிடம் கூறினர். அவர்கள் அவ்வாறு உயர்த்தவே நபியவர்கள் அதை உரிய இடத்தில் எடுத்து பதித்தார்.

நபியவர்களின் சமயோசிதமும் புத்திசாதுரியமுமான இச்ச்செய்கை மூலம் அரேபியருக்கிடையில் ஏற்படவிருந்த போர் தடுக்கப்பட்டது. இது நபியவர்களின் விவேகத்துக்கும் மதிநுட்பத்துக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.


நபித்துவத்திலிருந்து ஹிஜ்ரத் வரை

நபியவர்கள் 40வது வயதை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். இக்காலை அவர்களது உள்ளம் அதிகமதிகமாகச் சிந்திக்க  ஆரம்பித்தது.  தன்னைப் பற்றியும் தன்னைப் படைத்தவனைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்கினார்கள். தான் சார்ந்த சமூகத்தின் நிலைதன்னை எண்ணிப்பார்த்தார்கள். கொள்ளை, களவு, ம்மது, விபசாரம், குடி சூது போன்ற அ நியாயங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தனது சமூகத்தை எவ்வாறு சீர்திருத்தம் செய்யலாம் என்றெல்லாம் எண்ணிப்பார்த்துக் கவலைப் பட்டார்கள்.

எனவே நபியவர்கள் தனிமையில் இருப்பதை அதிகம் விரும்பினார்கள். இதற்காக மக்காவில் இருந்து சுமார் 4 கிலோ மீற்றர் தூரத்திலிருக்கும் ஹிறாக் குகையைத் தெரிவு செய்தார்கள். அங்கு சென்று தனித்திருந்தார்கள். பல நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை எடுத்துச் சென்று  அங்கு தியானத்தில் ஆழ்ந்தார்கள். 'றமழான்' மாததில் மிக அதிகமான காலத்தை அவர்கள் ஹிராவில் கழித்தார்கள். இவ்வாறு நபியவர்கள் சுமார் மூன்று அல்லது நாங்கு ஆண்டுகளை தியானத்தில் கழித்தார்கள்.

இப்பொழுது நபியவர்களுக்கு நாற்பதாண்டுகள் பூரணமாவதற்கு ஆறு மாதங்கள் இருந்தன. அவர்களுக்குத் தெளிவான கனவுகள் தென்பட ஆரம்பித்தன. ஆறு மாதங்கள் வரை கனவு தென்பட்டது. நாற்பது வயது பூர்த்தியடைந்த பின் ஓரிரவு ஹிறா குகையில் வைத்து அல் குர்-ஆன் அருளப்பட்டது. இவ்விரவு பற்றி அல்குர்-ஆன்,
"நிச்சயமாக நாம் அதனைப் பாக்கியமுள்ள இரவில் இறக்கினோம்". (44:03)
"நிச்சயமாக நாம் அதை (குர்-ஆனை)க் கண்ணியமிக்க (லைலதுல் கத்ர் என்ற) இரவில் இறக்கினோம்". (97:01)
என்று கூறுகின்றது.

முஸ்னத் அஹ்மதில் "அல் குர்-ஆனை அல்லாஹ் றமழான் மாதம் 24ம் நாள் இறக்கி வைத்தான்" என்று ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது. நபியவர்களிடம் திங்கட்கிழமை நோன்பு பற்றி விசாரிக்கப்பட்ட பொழுது "அன்றைய தினத்திலேயே நான் பிறந்தேன். அதிலேயே என் மீது வஹீ அருளப்பட்டது" என்று கூறினார்கள். (முஸ்லிம், அஹ்மத்)

அல்குர்ஆன் அருளப்படுவதோடு நபி (ஸல்) அவர்களின் நபித்துவப் பணியும் ஆரம்பமாகியது. நபியவர்களுக்கு நபித்துவம் கிடைத்த இச் சம்பவம் பற்றி இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் தனது ஸஹீஹுல் புகாரி யில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்கள்.

அன்னை ஆய்ஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; ' தூக்கத்தின் போது ஏற்பட்ட நல்ல கனவுகள் மூலம்தான் நபியவர்களுக்கு வஹீ வருவதற்கான அறிகுறிகள் ஆரம்பமாகின. இக்காலை அவர்கல் கண்ட கனவுகள் குழப்பமற்ற தெளிவான கனவுகளாகவும் அவை அச்சொட்டாக நிஜ வாழ்க்கையில் நடைபெறுபவையாகவும் இருந்தன. பின்னர் அவர்களுக்குத் தனிமை வெகுவாக இனிக்க ஆரம்பித்தது. எனவே ஹிராக் குகையில் பல இரவுகள் தனித்திருக்க ஆரம்பித்தார்கள். இதன்போது தனக்குத் தேவையான உணவுகளையும் எடுத்துக்கொண்டே செல்வார்கள். உணவு தீர்ந்துவிடும்போது மனைவி கதீஜாவிடம் வந்து உணவெடுத்துக் கொண்டு செல்வார்கள்.இவ்வாறே ஹிராக் குகையில் நபியவர்களுக்கு உண்மை உதயமாகும் வரை தியானத்தில் ஈடுபாடுகாட்டி வந்தார்கள்.

ஒரு நாளிரவு நபியவர்களிடம் ஒரு மலக்கு வந்து "ஓதுவீராக!" என்று கூறினார். அதற்கு நபியவர்கள் தன்னால் ஓத முடியாது எனப் பதிலளித்தார்கள். தொடர்ந்து நபியவர்களே கூறுகின்றார்கள்; நான் திக்குமுக்காடும் வரை அவர் என்னை இறுகக் கட்டியணைத்துப் பின்னர் என்னை விட்டுவிட்டு இரண்டாம் முறை என்னை நோக்கி ஓதுவீராக என்றார். அப்போதும் நான் எனக்கு ஓதத் தெரியாது என்றே பதிலளித்தேன். அந்த மலக்கு மீண்டும் என்னை முன்பு போலவே இறுகத் தழுவினார். இவ்வாறு மும்முறை நடைபெற்றது.  பின்னர் அந்த மலக்கு ;

அனைத்தையும் படைத்த உமது ரப்பின் பெயரால்  ஓதுவீராக, அவந்தான் மனிதனை "அலகா" விலிருந்து படைத்தான். ஓதுவீராக, உமது இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுதுகோலைக் கொண்டு (எழுதக்) கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாததையெல்லாம் கற்றுக் கொடுத்தான்."   என்ற அல்குர் ஆனின் 96ம் அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்களையும் ஓதிக்காட்டினார்.

"எதிர்பாராத இந்நிகழ்ச்சியினால் அதிர்ச்சியுற்ற நபியவர்கள் உள்ள(மும் உடலு)ம் நடுநடுங்கத் திரும்பி (வீடு) வந்து, "என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்களெனக் கூறியவாறு கதீஜாவிடம் நிகழ்ந்தவற்றை எடுத்துக் கூறித் தனக்கு ஏதோ நடந்திருப்பதாகவும் பயமாக இருப்பதாகவும் கூறினார்கள் உடனே கதீஜா (ரழி), 'பயப்படாதீர்கள்  அல்லாஹ் உங்களை ஒருபோதும் கைவிடப் போவதில்லை. ஏனெனில் நீங்கள் உறவினரைச் சேர்ந்து நடக்கின்றீர்கள்; சிரமங்களைச் சகித்துப் பொறுமை செய்கிறீர்கள்; வறியோருக்கு உதவிக்கரம் நீட்டுகின்றீர்கள்; விருந்தினரைக் கண்ணியப்படுத்துகின்றீர்கள்; அ நீதிக்கு எதிராகப் போராடுகின்றீர்கள்" என்று ஆறுதல் கூறினார்கள்.

பின்னர் கதீஜா தனது சிறிய தந்தையின் மகனான வறகத் இப்னு நவ்பல் என்பவரிடம் நபியவர்களை அழைத்துச் சென்றார்கள். ஒரு கிறிஸ்தவராகவும் வயோதிபராகவும்  இருந்த வறகா முன்னைய வேதங்களையும் கற்றறிந்திருந்த ஒருவராக மட்டுமன்றி ஹீப்ரு மொழியிலும் புலமை பெற்றிருந்தார். பார்வையை அவர் இழந்திருந்த நிலையிலும்  இஞ்சீலை ஹீப்ரு மொழியில் எழுதி வந்தார்.

இவரிடம் நபியவர்கள் தமக்கு நடந்தவற்றை ஒன்றும் விடாது கூறினார்கள். சம்பவத்தைக் கேட்டறிந்த வறகா நபியவர்களிடம் "உம்மிடம் வந்தவர் அன்னாமூஸ் ஜிப்ரீல் (அலை) என்ற மலக்காவார். அல்லாஹ் மூஸா (அலை) அவர்களிடமும் இம்மலக்கையே அனுப்பினான். அதோ, உமது சமூகத்தவர் உம்மை வேளியேற்றும் போது நான் உம்முடன் இருக்க வேண்டுமே ; வாலிபனாக இருக்க வேண்டுமே." என்று அங்கலாய்த்துக் கொண்டார். அப்பொழுது நபியவர்கள் "என்னை அவர்கள் வெளியேற்றுவார்களா?" என்று ஏக்கத்துடன் வினவ, அவர் "ஆம். உமக்கு வழங்கப்பட்ட தீன் (மார்க்கம்) போன்று முன்னர் வழங்கப்பட்ட போதெல்லாம் நிச்சயம் எதிர்ப்பு வந்தது. நான் அவ்வேளை, உங்களுடன் வாழ நேர்ந்தால் உங்களுக்கு முழுமையாக உதவுவேன்". என்று கூறி முடித்தார்.

அல் குர்-ஆனின் முதல் போதனை, நபியவர்களுக்குக் கிடைத்த முதல் வஹீ ஓதுதல், படித்தல், கற்றல், வாசித்தல் ஆகிய பொருள் கொண்டதாக அமைந்திருப்பதன் மூலம் கல்விக்கு இஸ்லாம் வழங்கியுள்ள முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ள முடியும்.

மேலும், இங்கு அல்லாஹ்வின் றுபூபிய்யத் எனும் தெய்வீகத் தன்மையை ஏற்று மனிதனின் உபூபிய்யத் எனும் அடிமைத்துவத்தை வெளிப்படுத்தி வாழ்வதற்குக் கல்வி அவசியம் என்பதும் பெறப்படுகின்றது.

அல் குர்-ஆனின் ஆரம்ப வசனங்கள் இறக்கப்பட்ட பின்னர் சில காலம் வஹீ இறங்கவில்லை. இவ்வாறு வஹீ இறங்காதது சிறிது காலமேயாயினும் இக்காலத்தில் நபியவர்கள் மிகுந்த மன வேதனையடைந்து காணப்பட்டார்கள். தன்னையே அழித்துவிட எண்ணும் அளவுக்கு அவர்களின் கவலை அதிகரித்தது. பல முறை வானின் பக்கம் தலையை உயர்த்தி ஜிப்ரீல் (அலை) அவர்களின் வருகையை எதிர்பார்த்து ஏங்குவார்கள். அவ்வேளைகளிலெல்லாம் ஜிப்றீல் (அலை) அவர்கள் காட்சி கொடுத்து "முஹம்மத், நீ ஓர் நபி" ஈன்று கூறி நபியவர்கள் நபி என்பதை உறுதிப்படுத்தித் தேற்றுவார்கள். இவ்வாறு பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி நபியவர்களுக்குத் தாம் நபி என்ற உண்மையை நன்கு உணர்த்தி மனதில் ஆழமாகப் பதிய வைத்த பின்னர் அல்லாஹ் மீண்டும் வஹீயைக் கொடுக்க உத்தேசித்தான் போலும்.

"நான் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது வானிலிருந்து ஓர் அசரீரி கேட்டது. உடனே நான் வானின் பக்கம் தலையை உயர்த்தினேன். அங்கே ஹிராவில் என்னிடம் வந்த அதே மலக்கு காட்சியளித்தார். அவரைக் கண்டதும் எனக்கு ஏற்பட்ட திடுக்கத்தில் நிலத்தில் வீழ்ந்து விட எத்தணித்தேன். "என்னைப் போர்த்துங்கள்; என்னைப் போர்த்துங்கள்." என்று கூறிக் கொண்டு எனது வீட்டுக்கு விரைந்து வந்தேன். அப்போது, "போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே; நீர் எழுந்து மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக; மேலும், உம் இறைவனைப் பெருமைப்படுத்துவீராக; உம் உடைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்வீராக; மேலும் அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி) விடுவீராக". (74:1-5) என்ற ஆயத்துக்களை அல்லாஹ் இறக்கினான். பின்னர் வஹீ தொடர்ந்து இறங்கிற்று." (ஸஹீஹ் புஹாரி)

தஃவாப் பணி (இஸ்லாத்தின்பால் அழைப்பு)

"நீர் எழுந்து (மக்களுக்கு)அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக"என்ற இந்தக் கட்ட்ளையைத் தொடர்ந்து நபியவர்கள் தமது பிரச்சாரப்பணியைத் தொடங்கினார்கள். ஓய்வு ஒழிச்சல் இன்றி தஃவத்தில் ஈடுபட்டார்கள்.

தமக்கெனவோ,தம் குடும்பதுக்கெனவோ மட்டும் வாழாது முழு மனித சமுதாயத்துக்குமான மோட்சப்பாதையையத் தெளிவுபடுத்தினார்கள்.இப்பணியில் அவர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களையெல்லாம் பொருத்து நடந்து கொண்டார்கள். இதையே முன்கண்ட(74:05) ஆம் வசனத்தை அடுதுவரும் அறிவுரை நபியவர்களுக்கு புகட்டியது.

"(பிறருக்குக் கொடுப்பதையும் விட அவர்களிடமிருத்து)அதிகமாகப் பெறும்(நோக்கோடு)உபகாரம் செய்யாதீர்.இன்னும் உம் இறைவனுக்காகப் பொறுமையுடன் இருப்பீராக."(அல்குர்ஆன் 74:6-7)

இவ்வாறு நபியவர்கள் தமது "வபாத்" வரை ஏறத்தாழ 23 ஆண்டு  தப்லீக் - பிரச்சாரப் பணியில் ஈடுபட்டார்கள்.


நபி (ஸல்) அவர்களின் தஃவாப் பணியை இரு பகுதிகளாகப் பிரித்து நோக்கலாம்.
1. ஏறத்தாழ 13 வருடங்களைக் கொண்ட மக்காலப் பிரிவு
2. பத்து வருடங்களைக் கொண்ட மதீனாக் காலப் பிரிவு

மக்காக் காலப் பிரிவை மேலும் இரு பகுதிகளைக் கொண்ட காலப் பிரிவுகளாகப் பிரித்து நோக்கலாம்.
1. இரகசியப் போதனை (மூன்று வருடங்கள்)
2. பகிரங்கப் போதனை ( நுபுவ்வத்தின் 4ம் ஆண்டு முதல் ஹிஜ்ரத் வரை)

பகிரங்கப் போதனை மேற்கொள்ளப்பட்ட காலத்தில் விதேசிகளுக்கான போதனைகளும் மேற்கொள்ளப்பட்டன என்பது முக்கியமான விடயமாகும். இது நுபுவ்வத்தின் 10ம் ஆண்டிலிருந்து ஆரம்பமானது.

நபி (ஸல்) அவர்கள்தொடக்கத்தில் தமது பிரசாரத்தை இரகசியமாகவே மேற்கொண்டார்கள். எனவே உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் முதலில் தமது நபித்துவத்தை அறிவித்து இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுத்தார்கள். இதனால் தனது மனைவி கதீஜா, அருமை நண்பர் அபூபக்ர், பணியாளர் ஸைத், உறவினருள் அலி போன்ற நபியவர்களுக்கு மிக மிக நெருக்கமானவர்களே ஆரம்பத்தில் இஸ்லாத்தை ஏற்க முன்வந்தனர்.

நபியவர்களுக்கு இடப்பட்ட கட்டளையைத் தனக்கிடப்பட்ட கட்டளையாகக் கருதி நண்பர் அபூபக்ரும் அன்றே இஸ்லாமிய அழைப்புப் பணியில் அர்ப்பணித்துக் கொண்டார். தோழர் அபூபக்ரின் பிரசார முறைகளால் ஈர்க்கப்பட்ட பின்வருவோரும் இஸ்லாத்தை  ஏற்றுக் கொண்டனர்.
1. உஸ்மான் இப்னு அப்பான் (ரழி)
2. ஸுபைர் இப்னு அவாம் (ரழி)
3. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரழி)
4. ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரழி)
5. தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி)
இவர்களைத் தொடர்ந்து வேறு சிலரும் இஸ்லாத்தில் இணைந்தனர். அவர்களுள்
1. அடிமை பிலால் இப்னு ஹபாஹ் (ரழி)
2. அபூ உபைதா இப்னுல் ஜர்ராஹ் (ரழி)
3. பாத்திமா பின்த் கத்தாப் (ரழி) போன்றோர் குறிப்பிடத்தக்கோராவர்.

ஏறத்தாழ் 40 பேர் வரையில் இஸ்லாத்தின்பால் கவரப்பட்ட இக்காலப் பகுதியில் தஃவா இரகசியமாகவே நடைபெற்று வந்தது. அஸ்ஸாபிகூனல் அவ்வலூன் (முதன் முதலாக -ஈமான் கொள்வதில்- முந்திக்கொண்டோர்) என்று அல் குர்-ஆனில் (9:100) இவர்கள் புகழ்ந்து கூறப்பட்டுள்ளார்கள்.

பகிரங்கப் பிரசாரமும் குறைஷியரின் எதிர் நடவடிக்கையும்

நுபுவ்வத்தின் முதல் மூன்றாண்டு காலத்திலும் நபியவர்கள் இரகசியமாக தனித் தனியாக மக்களை சந்தித்து தப்லீக் (பிரச்சாரம்) மேற்கொண்ட போதும்  குறைஷியருக்கும் இத்தகவல் எட்டியது. எனினும் அவர்கள் இது பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஏற்கனவே மக்காவில் இருந்து வந்த உமையா இப்னு அபுஸ்ஸல்த், கிஸ்ஸுப்னுஸாயிதா, அம்ர் இப்னு நுபைல் போன்றோர் சொல்லி வந்த சமயக் கருத்துக்களையே நபியவர்களும் சொல்லுவதாக குறைஷியர் கருதி வந்தனர்.

இதன்போது, நபியவர்களுக்கு அல்லாஹ்வின் மற்றொரு கட்டளை பிறந்தது. "இன்னும் உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக". (26:214) என்பதே அக்கட்டளை. இதனித் தொடர்ந்து நபியவர்கள் முதன்முறையாகத் தமது உறவினர்களை ஓரிடத்துக்கு அழைத்தார்கள். பனூ ஹாஷிம், பனூ முத்தலிப் ஆகிய இரு குடும்பத்தாருமாக ஏறத்தாழ 45 பேர் நபியர்களின் அழைப்பை ஏற்று ஒன்று கூடினர். இச்சந்தர்ப்பத்தில் நபியவர்கள் பேச ஆரம்பித்த போது, அபூலஹப் குழப்பம் விளைவித்ததனால் அவர்கள் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. அபூதாலிப் தனது மூதாதையரின் மார்க்கத்தை விட்டுவிட விரும்பவில்லையெனினும் நபியவர்களுக்குப் பக்கபலமாக நிற்பதாக அப்போது பகிரங்கமாக அறிவித்தார். இச்சந்தர்ப்பத்தில் தமது உறவினர்களின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ளும் வாய்ப்பு நபியவர்களுக்குக் கிடைத்தது.

பின், மற்றொரு முறை ஸபா குன்றின் மீதேறி உறவினர்களை அழைத்தார்கள். அவ்வேளை நபியவர்கள் விடுத்த அறைகூவல் ஸஹீஹுல் புஹாரியில் பின்வருமாறு பதிவாகியுள்ளது.
'உமது நெருங்கிய உறவினருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்விராக!' (26:214) என்ற வசனம் இறங்கியதும் நபியவர்கள் ஸபா மலை மீது ஏறி பிஹ்ர் குடும்பத்தவர்களே! அதீ குடும்பத்தவர்களே! என்று குறைஷியரின் குடும்பங்களை அழைத்தார்கள். அவர்கள் அங்கு ஒன்றுகூடினர். அவ்விடம் வர முடியாதவர்கள் நடப்பதை அறிந்து வருவதற்காகத் தமது பிரதிநிதிகளை அனுப்பினர். அபூலஹபும் ஏனைய குறைஷியரும் சமூகம் கொடுத்திருந்தனர். நபியவர்கள் பேசத் தொடங்கினார்கள். "இப்பள்ளத்தாக்கூடாக் ஒரு படை உங்களைத் தாக்க வருகிறது, என்று நான் சொன்னால் எனது கூற்றை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா" என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள் "ஆம். நீங்கள் பொய் சொன்னதை இதுவரை நாம் செவியுற்றதே இல்லை." என்று கூறினார்கள். உடனே நபியவர்கள் "கடுமையான வேதனையைப் பற்றி நான் உங்களுக்கு எச்சரிக்கிறேன்." என்று கூறினார்கள். அதற்கு அபூலஹப் "உமக்கு கேடு உண்டாகட்டும். இதற்காகவா எம்மை ஒன்றுகூட்டினீர்" என்று தூற்றினான். உடனே 'அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமாகட்டும்; அவனும் நாசமாகட்டும்' என்ற அல் குர்-ஆனின் 111வது சூறா இறங்கிற்று.

இச்சந்தர்ப்பத்தில் நபியவர்களுக்கு வீசி அடிப்பதற்கென்று அபூலஹப் கல்லொன்றை எடுத்ததாக திர்மிதியில் ஹதீஸ் ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

நாட்டுக்கு ஏற்பட இருக்கும் பேராபத்தை அறிவிப்பதற்காக ஸபா குன்றின் மீதேறி அழைப்பு விடுப்பதும் அவ்வழைப்பை ஏற்ற மக்கள் அங்கு திரள்வதும் அன்றைய மரபாகக் காணப்பட்டது. நபியவர்கள் தஃவா மேற்கொள்வதற்கு இந்த உத்தியைக் கையாண்டார்கள். நபியவர்களின் தஃவா எப்போது தொடங்கியதோ அப்போதே அதற்கு எதிர்ப்பும் கிளம்பியது. எனினும், நுபுவ்வத்தின் 4ம் ஆண்டிலிருந்தே ஈதிர்ப்பு கூட்டு நடவடிக்கையாக முடுக்கிவிடப்பட்டது.

இதனைப் பின்வருமாறு நோக்கலாம்.
1. நபியவர்களை மக்கள் மதியாதிருப்பதற்காக அவர்களை இழிவானவராகக் காட்டுதல்
2. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோரைச் சித்திரவதை செய்தல்
3. நபியவர்களையும் ஸஹாபாக்களையும் பகிஷ்கரித்தல்
4. நபியவர்களைக் கொலை செய்ய முயற்சித்தல்

எத்தகைய எதிர்ப்பு வன்ந்த போதிலும் நபியவர்களது பிரசாரத்தின் வேகம் சற்றும் குறையவில்லை;  அது இடை  நிறுத்தப்படவுமில்லை; தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருந்தது.

நாற்பதாண்டுகள் நபியவர்களை "அல் அமீன்", "அஸ்ஸாதிக்" என்றெல்லாம் புகழ்ந்துவந்த மக்கத்துக் காபிர்கள்  இப்போது அவர்களை "ஸாஹிர்" (சூனியக்காரன்), "கஸ்ஸாப்" (பொய்யன்), "மஜ்னூன்"(பைத்தியக்காரன்), ""ஷாஇர்"(கவிஞன்) என்றெல்லாம் வசைபாடி  நபியவர்களின் தஃவாப் பணியைதடுத்து நிறுத்தப் பாடுபட்டனர்.  அவர்களில் சிலர் தாம் முஸ்லிமாகாவிட்டாலும்கூட நபியவர்களுக்கு உதவி வந்தனர். இன்னும் சிலர் இடையூறும் செய்யாது உதவியும் செய்யாது வாழாவிருந்தனர்.

இக்காலப் பிரிவில் நபியவர்களின் பிரசார முயற்சியைத் தடுத்து நிறுத்துவதற்காகவும் நிராகரிப்பதற்காகவும் குறைஷியர் சுமத்திய குற்றச்சாட்டுக்கள் சிலவற்றையும், அவர்கள் மேற்கொண்ட ஒரு சில தடை முயற்சிகளையும் பின்வருமாறு நோக்கலாம்.

1. மனிதனொருவன் இறைத்தூதராக அனுப்பப்படுவதா என வினவுதல்
2. உண்டு உடுத்துத் திரியும் ஒருவர் நபியாவது எப்படி என்று வினா எழுப்புதல்
3. வஹீயை மனிதனின் கூற்றெனக் கூறுதல்
4. வஹீயை வேறு ஓர் அறிஞரிடம் இருந்து கற்றதெனக் கூறியமை
5. வஹீயை முன்னோரின் கட்டுக்கதையென வருணித்தல்
6. நபியவர்களிடம் சில  வழிபாடுகளை விட்டுவிடுமாறு வேண்டுதல்
7. நபியவர்களை சிலை வணக்கத்துக்கு இணங்க வைக்க முயற்சித்தல்
8. முஸ்லிம்களை வழிகேடர்களெனத் தூற்றித் தூசித்து அவர்களைப் பரிகசித்துச் சிரித்தல்
9. நபியவர்களைக் கவிஞன் என வருணித்தல்
10. நபியவர்களை சூனியக்காரன் எனச் சாடுதல்
11. நபியவர்களைப்  பொய்யனென இழித்துரைத்தல்
12. நபியவர்களைப் பைத்தியக்காரனென வருணித்தல்

இவ்வாறான தமது முயற்ச்களெதுவும் கைகூடாமல் போகவே குறைஷியர் பிறிதொரு முயற்சியாக நபியவர்களின் பெரிய தந்தை  அபூதாலிபிடம் தூது சென்றனர். நபியவர்களின் பிரசாரத்தைத் தடுத்து நிறுத்துமாறும் இல்லாவிட்டால் தமக்கும் அவருக்குமிடையில் தடைக் கல்லாக நிற்க வேண்டாமெனவும் அபூதாலிபை அவர்கள் வேண்டினர். ஆனால் அபூதாலிப் குறைஷியரை நளினமாகவும் சமயோசிதமாகவும் பேசி அனுப்பி வைத்தார்.

பகிரங்கப் பிரசாரம் ஆரம்பமாகி ஓரிரு மாதங்களே உருண்டோடியிருந்தன.அதற்குள் ஹஜ் காலமும் நெருங்கிவிட்டிருந்தது. குறைஷியர் ஒன்றுகூடினர். விதேச்களை நபியவர்களின் போதனையிலிருந்து காப்பாற்றும் வழிவகைகளை அவர்கள் அலச் ஆராய்ந்தனர். "வலீத் இப்னு முகீரா"வின் தலைமையில் திட்டம் தீட்டினர். இறுதியில் ஹஜ் காலத்தில் குறைஷியர் நபியவர்களைத் தொடர்ந்து சென்று அவர்களைச் சூனியக்காரனென வெளி-நாட்டவருக்கு அறிமுகப்படுத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது.

நபியவர்கள் ஹஜ் காலத்தில் உக்காழ், துல்மஜாஸ் ஆகிய சந்தைகள், ஹாஜிகளின் விடுதிகள் எல்லாம் சென்று அல்லாஹ்வின் தூதை அறிவித்தார்கள். ஆனால், அங்கெல்லாம் ச்சென்று "இவனை ஏற்காதீர்கள்; இவன் பொய்யன், நெறி பிறழ்ந்தவன்" என்று கூறி வந்தான். (திர்மிதி, அஹ்மத்)

அதேவேளை, நழ்ர் இப்னு ஹாரிஸ் என்பவன் பாரசீக மன்னர்கள், றுஷ்தும் போன்றோரின் கதைகளைக் கூறி மக்களின் மனத்தை மாற்றம் செய்ய முயற்சித்தான். எவ்வாறாயினும் அறபு நாடு முழுவதும் நபியவர்கள் பற்றிய பிரஸ்தாபம் ஏற்படுவதற்கு குறைஷியரின் எதிர்ப் பிரச்சாரம் பெரிதும் உதவியது என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை.

குறைஷியரின் மற்றொரு தடை நடவடிக்கை இவ்வாறு அமைந்திருந்தது. நபியவர்களையும் இஸ்லாத்தைத் தழுவுவோரையும் துன்புறுத்துவதற்கென்றே குறைஷியரின் பெரும் தலைவர்கள் 25 பேரைக் கொண்ட சபை ஒன்று நிறுவப்பட்டது. அதன் தலைவனாக நபியவர்களின் தந்தையின் சகோதரனும் அண்டை வீட்டானுமான அபூலஹபே காணப்பட்டான். இவனே நபியவர்களையும் முஸ்லிம்களையும் துன்புறுத்துவதில் முன்னணி வகித்தான்.

அபூலஹபின் ஆண் மக்களாகிய உத்பா, உதைபா ஆகிய இருவரும் நபியவர்களின் இரு பெண் மக்களான றுகையா, உம்முகுல்தூம் ஆகிய இருவரையும் மணம்புரிந்திருந்தனர். நபியவர்களின் தஃவாப் பணியினால் ஆத்திரமடைந்த அபூலஹப் நபியவர்களின் பிள்ளைகளை விவாகரத்துச் செய்யுமாறு தம் மக்களை நிர்ப்பந்தித்து அவ்வாறே செய்வித்தான். அபூலஹபின் மனைவியான உம்மு ஜமீலும் கணவனுக்கு எந்த விதத்திலும் சளைத்தவளல்ல என்பது போல நடந்து கொண்டாள். இவள் நபியவர்களின் வீட்டு வாசலிலும் அவர்கள் செல்லும் வழியிலும் இரவோடிரவாக முட்களைப் பரப்பி வைப்பாள்.

இதேபோல், நபியவர்களைத் துன்புறுத்துவதில் அபூலஹபுக்கு அடுத்த இடத்தை வகித்தவன் அவர்களின் நெருங்கிய உறவினன் அபூஜஹ்ல் ஆவான். அபுல்ஹிகம் (அறிவின் தந்தை) எனப்பாராட்டப்பட்ட இவன் தனது தீய செயல்களினால் பிற்காலத்தில் அபூஜஹ்ல் (மடமையின் தந்தை) எனப் பெயர் பெற்றான். இவன் நபியவர்களைத் துன்புறுத்தியது மாத்திரமன்றி அவர்களைத் துன்புறுத்துமாறு பிறரையும் ஏவி வந்தான்.

நபியவர்களைப் போன்றே ஸஹாபாக்களும் பலவாறு இம்சிக்கப்பட்டனர். குறிப்பாக அடிமைகள், ஏழைகள், குடும்பச் செல்வாக்குக் குறைந்த நிலையில் இருந்தோர் அதிகமாகச் சித்திரவதைக்கும் கொடுமைகளுக்கும்  உள்ளாக்கப்பட்டனர்.


இஸ்லாமியப் பயிற்சிப் பாசறை (தாருல் அர்க்கம்)

இஸ்லாத்தின் முதல் பயிற்சிப் பாசறையாக அமைந்தது "தாருல் அர்க்கம்" எனப்பட்ட அர்க்கம் எனும் நபித் தோழரின் இல்லமாகும்.நுபுவ்வத்தின் 5ம் ஆண்டு தொடக்கம் இது இஸ்லாமிய அடிப்படையிலான பயிற்சிக்கான பிரதான மையமாகச் செயல்பட ஆரம்பித்தது.

ஸபா எனப்பட்ட ஒரு குன்றின்மீது அமைந்திருந்த இவ்வில்லம் எதிரிகளின் கண்களுக்கு எளிதில் புலப்படும் வகையில் அமையாதிருந்ததால் இவ்விடத்தையே நபியவர்கள் பொருதாமான இடமெனக் கருதித் தெரிவு செய்தார்கள். இக்காலப் பிரிவில் நபியவர்கள் பகிரங்கப் பிரசாரத்தை மேற்கொண்டிருந்த போதும் முஸ்லிம்களின் நலன் கருதி பிறர்  அறியாவண்ணமே நபியவர்களும் முஸ்லிம்களும் அங்கு கூடி வந்தனர். முஸ்லிம்களும் பொதுவாக இக்காலப் பிரிவில் தமது ஈமானை வெளிக்காட்டாது இருந்துவந்தனர். இந்த இல்லத்தில்தான் உமர் (ரழி) உட்படப் பலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


அபிஸீனிய ஹிஜ்ரத்

முஸ்லிம்கள்மீது குறைசியர் கொண்டிருந்த வெறுப்பும் கோபமும் நாளுக்கு நாள் அதிகரித்தது போன்றே அவர்களால் இழைக்கப்பட்ட கொடுமைகளும் அதிகரித்துக்கொண்டே சென்ன்றன. இந்த இன்னல்களையெல்லாம் முஸ்லிம்கள் சகித்துக்கொண்டபோதும் அவர்கள் அத்தனைபேரையும் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு நபியவர்களுகே இருந்தது. எனவே முஸ்லிம்களில் ஒரு குழுவினர் குறைஷியர் அறியாவண்ணம் "ஹபஷா" (அபிஸீனியா)வுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பன்னிரண்டு ஆண்களையும் நாங்கு பெண்களையும் கொண்ட இக்குழுவில் நபியவர்களது மகளார் ருகையாவும் அவரது கணவர் உஸ்மான்(ரழி) அவர்களும் இடம்பெற்றனர். நுபுவ்வத்தின் 5ல் இந்நிகழ்வு இடம்பெற்றது.முஸ்லிம்கள் செங்கடலைத் தாண்டி அபிஸீனியாவைப் போயடைந்தனர். இதன்போது குறைஷியர் முஸ்லிம்களைத் துரத்திச் சென்றனராயினும் அவர்களால் முஸ்லிம்களைப் பிடிக்க முடியவில்லை.

நபியவகளின் இ ந் நடவடிக்கை தலைவனொருவன் தனது பாதுகாபைவிடதன்னைச் சார்ந்திருக்கும் மக்களின் பாதுகாப்பையே முதலில் உறுதி செய்ய வேண்டுமென்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது. மட்டுமன்றி நபித்தோழர்கள் இஸ்லாத்துக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தனர் என்பதையுமிந்த ஹிஜ்ரத் எமக்கு உணர்த்துகிறது.

அபிஸீனியாவின் அப்போதைய மன்னனாகவிருந்த நஜ்ஜாஸி முஸ்லிம்களுக்குத் தனது நாட்டில் புகலிடம் கொடுத்து ஆதரித்தான். அவர்கள் அங்கு நிம்மதியாக வாழ்ந்தபோதும் அது நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. ஏறத்தாழ நாங்கு மாதங்கள் மட்டுமே அவர்கள் அபிஸீனியாவில் தங்கினர்.

நபியவர்கள் அல்குர் ஆனின் ஸூரா நஜ்மை இக்காலப் பிரிவில் ஒருமுறை இனிமையாக ஓதியதால் ஈர்க்கப்பட்ட குறைஷியர் தம்மை அறியாமலேயே நபியவர்களோடு சேர்ந்து "ஸஜ்தா திலாவத்தில்" வீழ்ந்துவிட்டனர். மஸ்ஜிதுல் ஹரமில் பகிரங்கமாக நடைபெற்ற இச்செய்தி திரிபடைந்து மக்கத்துக் குறைஷியர் இஸ்லாத்தைத் தழுவிவிட்டதாக அபிஸீனிய முஸ்லிம்களுக்குத் தகவல் கிடைத்தது. இதனால் நுபுவ்வத்தின் 5ம் வருடமே அவர்கள் மக்கா திரும்பினர். உண்மை தெரிய வந்ததும் சிலர் வந்த வழியே அபிஸீனியா மீண்டனர்.  வேற்சிலர் இரகசியமாக வந்து வாழ்ந்தனர்.  இன்னும் சிலர் குறைஷியரின் பக்கத் துணையோடு மக்கா வந்தனர்.

மன்னன் நஜ்ஜாஸி முஸ்லிம்களைத் திருப்பியனுப்பாது அவர்களுக்கு அபயமளித்தமையானது  குறைஷியருக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. என்வே அவர்கள் முஸ்லிம்கள்ள் மீது கொடுமைக்கு மேல் கொடுமை செய்யத் துணிந்தனர்.

நஜ்ஜாஸியின் நற்பண்பை ஊகித்தறிந்த நபியவர்கள் முஸ்லிம்களின் அனுபவத்தின் மூலம் அதை உறுதிப்படுத்திக்கொண்டார்கள். எனவே அங்கு இரண்டாம் முறை ஹிஜ்ரத் செல்ல ஒரு குழு தயார் செய்யப்பட்டது. இதுவும் முஸ்லிம்களைப் பாதுகாப்பததற்கு எடுக்கப்பட்டதொரு நடவடிக்கையாகும்.நிதானமாகவும் தூர நோக்கோடும் ஹிஜ்ரத்துக்கான திட்டம் தீட்டப்பட்டது.இந்த ஹிஜ்ரத்தில் 83 ஆண்களும் 18 பெண்களுமாக மொத்தம் 101 முஸ்லிம்கள் பங்குபற்றினர்.

இம்முறை குறைஷியர் மிகவும் விழிப்பாக இருந்தனர்.முஸ்லிம்கள் நாட்டைவிட்டு வெளியேறாவண்ணம் கண்காணிப்பாக நடந்து கொண்டனர். முதலாம்ஹிஜ்ரத்தினால் அவர்கள் படித்துக்கொண்ட பாடமாக இந்த நடவடிக்கை அமைந்தது. ஆனால் குறைஷியர் கண்ணில் படாதவாறு முஸ்லிம்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். குறைஷியர் முஸ்லிம்களது வெளியேற்றத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் அவர்களைத் தொடர்ந்து சென்றனராயினும் இவர்களால் முஸ்லிம்களைப் பிடிக்க முடியவில்லை.

அபிஸீனியாவுக்கான 1ம் 2ம் ஹிஜ்ரத்துக்கள் நபியவர்களின் சிறந்த திட்டமிடலுக்கான எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

தடுத்து நிறுத்தும் முயற்சி தோல்வியடையவே குறைசியர் பிறிதொரு சூழ்ச்சியில் இறங்கினர். தூதுவர் இருவரை அவர்கள் அபிஸீனியாவுக்கு அனுப்பி வைத்தனர். அம்ர் இப்னு ஆஸ்,  அபூ ரபீஆ ஆகிய அவ்விரு தூதுவர்களுமபிஸீனியாவின் அரசவை மந்திரி பிரதானிகளுக்கக் கையுறை வழங்கி முதலில் அவர்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் மன்னனிடம் சென்று முஹாஜிர்களைப் பற்றி, "இவர்கள் எமது நாட்டில்குற்றமிழைத்தவர்கள்; தேச் துரோகிகள்; அங்கிருந்து உங்கள் நாட்டுக்குத் தப்பியோடி வந்தவர்களாவர்"  என்று முறையிட்டு, அவர்களைக் கைது செய்து தம்மிடம் ஒப்படைக்குமாறு வேண்டினர்.

நஜ்ஜாஷி முஹாஜிர்களை விசாரணைக்காக அழைத்தார். முஸ்லிம்கள் சார்பில் பேசிய ஜஃபர் இப்னு அபூதாலிப் (ரழி) அவர்கள் ந்பியவர்கள் அறிமுகப்படுத்திய இஸ்லாத்தை நயம்பட எடுத்துக் கூறி, இஸ்லாத்தை ஏற்றதற்காகக் குறைஷியர் தமக்கிழைத்த கொடுமைகளையும் மன்னனுக்கு விளக்கினார்கள். இதைக்கேட்டுத் திருப்தியுற்ற மன்னன் குறைஷித் தூதரின் வேண்டுகோளின்படி முஸ்லிம் அகதிகளை தூதுவர்களிடம் ஒப்படைக்க மறுத்து விட்டார். மேலும், முஸ்லிம்கள் தமது நாட்டில் பூரண சுதந்திரத்துடன் வாழ்வதற்கு அனுமதியளித்தார்.

குறைஷித் தூதர்கள் இருவரும் உடனே தம் நாடு திரும்பவில்லை. மறுநாள் மற்றொரு சூழ்ச்சியில் இறங்கினர். நபி ஈஸா (அலை) அவர்கள் பற்றிய முஸ்லிம்களின் கொள்கை என்னவென்று விசாரிக்கப்பட்டது. அதிலும் குறைஷியருக்குத் தோல்வியே கிட்டியது. குறைஷித் தூதுவர் இருவரும் அவமானத்துடன் நாடு திரும்பினர்.

இதன் பின்னர், மக்காவில் எஞ்சியிருந்த முஸ்லிம்களை குறைஷியர் மேலு சித்திரவதை செய்யலாயினர். ஆயினும், அவர்கள் இழைத்த கொடுமைகள் அனைத்தையும் முஸ்லிம்கள் பொறுமையுடன் சகித்துக் கொண்டனர்.

குறைஷியருக்குத் தொடர்ந்து தோல்வி ஏற்படவே அவர்கள் அபூதாலிபின் மூலம் தமது இலட்சியத்தை அடைய எண்ணினர். அவரிடம் மற்றொரு முறை தூது சென்று நபியவர்களின் பிரசாரத்தைத் தடுத்து நிறுத்துமாறும் இன்றேல் அவருக்கும் தமக்கும் இடையே தடைக் கல்லாக இருக்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனால் அபூதாலிபின் நிலையிலும் சிறிது தளம்பல் ஏற்பட்டாலும் கூட இறுதியில் நபியவர்களுக்கு உதவுவதாக அவர் வாக்களித்தார்.

மற்றும் ஒரு முறை குறைஷியர் அபூதாலிபிடம் சென்று வலீதின் மகன் இமாறத் என்ற வாலிபனை பிரதியீடாகப் பெற்றுக் கொண்டு நபியவர்களை கொலை செய்வதற்காக தம்மிடம் ஒப்படைக்குமாறு வேண்டினர். இதற்கும் அபூதாலிப் இணங்கவில்லை. இத்தூதுக் குழுக்கள் இரண்டுமே நுபுவ்வத் ஆறாம் ஆண்டு இடம்பெற்றன.

இவ்வாறு தமது திட்டங்கள் அனைத்துமே தோல்வியில் முடிந்தமையால் குறைஷியர் நபியவர்களை கொலை செய்வதற்கு பலவாறு முயற்சித்தனர்.

இதன்வழியாக ஒருமுறை உதைபா நபியவர்களைக் கொலை செய்வதற்கெனச் சென்று முடியாமல் போகவே அவர்களின் ஆடைகளைக் கிழித்து முகத்தில் காறி உமிழ்ந்ததோடு வேறுபல இன்னல்களையும் செய்தான்.

பிறிதொரு தடவை உத்பா ஸுஜூதிலிருந்த நபியவர்களின் பிடறியில் ஏறி மிதித்தபோது அவர்களது கண்களிரண்டும் பிதுங்க ஆரம்பித்தன.

இன்னொருமுறை நபியவர்கள் ஸுஜூதில் இருக்கும் சமயம் பாராங்கல் ஒன்றைத் தலையில் போட்டு அவர்களைக் கொலை செய்யத் திட்டமிட்ட அபூஜஹ்ல், தனது முயற்சியில் தோல்வி கண்டு பின்வாங்கினான். எனினும் மற்றொருதரம் நபியவர்களின் தலையில் கல்லால் அடித்துக் காயப்படுத்தினான்.

குறைஷியர் சிலர் ஒன்று சேர்ந்து நபியவர்களின் மேலங்கியால் அவர்களின் கழுத்தில் சுருக்கிட்டுக் கொன்றுவிட முயற்சித்தனர்.

இவ்வாறு நபியவர்களியக் கொலை செய்யப் பல முறை குறைஷியர் முயன்றும் அவர்களால் அவர்களது திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. எதிரிகளது அத்தனை சூழ்ச்சிகளில் இருந்தும் அல்லாஹ் அவர்களைப் பாதுகாத்தான்.


தடுப்புக் காவல் ( சமூகப் பகிஷ்காரம் )

குறைசியர் முஸ்லிம்களுக்கெதிராக எடுத்த நடவடிக்கைகள் யாவும் ஒன்றன் பின் ஒன்றாகத் தோல்வியடைந்தது மாத்திரமன்றி முஸ்லிம்களது எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே சென்றது. அதே வேளை பெரும் வீரர்களான ஹம்ஸாவும் உமரும் இஸ்லாத்தில் இணைந்து கொண்டதன் மூலம் முஸ்லிம்களதி பலம் மேலும் வலுவடைந்தது.

நபியவர்களின் உறவினர்களான ஹாஷிம் மற்றும் முத்தலிப் கோத்திரத்தார் அபூதாலிபின் தலைமையில் ஒன்று திரண்டு நபியவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கி வரலாயினர்.

எனவே குறைஷியர் நபியவர்களையும் அவர்களின் உறவினர்களையும் பகிஷ்கரிக்கத் தீர்மானித்தனர். சமூக, பொருளாதார,தகவல் பரிமாற்ற, அரசியல் ரீதியான சகல தொடர்புகளையும்  குறைஷியர் துண்டித்துக் கொண்டனர். "முஹம்மதைக் கொலை செய்வதற்காக ஒப்படைக்கும் வரை ஹாஷிம், முத்தலிப் கிளையார்களின் எந்தவொரு சமாதானத்தையும் ஏற்பதில்லை; அவர்கள் மீது இரக்கம் காட்டுவதில்லை" என்ற பொது அறிவித்தலொன்றும் கஃபாவில் தொங்கவிடப்பட்டது.

நபியவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான குறைஷியரின் கூட்டு நடவடிக்கைக்கு இது சிறந்ததொரு எடுத்துக் காட்டாகும்.

குறைஷியரின் பகிஷ்கரிப்பைத் தொடர்ந்து நபியவர்களும் உறவினர்களும் முஸ்லிம்களும் "ஷிஃபு அபீ தாலிப்" எனும் பள்ளத்தாக்கில் ஒதுங்கி ஒன்றாக வாழ்ந்தனர். இக்காலப் பிரிவில் அவர்கள் பல விதமான இன்னல்களை அனுபவித்தனர். உணவு, உடை, வீடு, மருத்துவ வசதி போன்ற அடிப்படைத் தேவைகளைக்கூடப் பெற முடியாத்வாறு அவர்கள் தடுக்கப்பட்டனர். பெண்களும் சிறுவர்களும் முதியோரும்பசியின் கொடுமையினால் அழுது பிரலாபித்தனர். "அஷ்ஹுருல் ஹுரும்" எனப்பட்ட சங்கையான மாதங்களில் மட்டுமே அவர்களுக்கு அச்சமின்றி வெளியில் செல்லக்கூடியதாக இருந்தது. தமக்குத் தேவையான பொருட்களை வெளிப் பிரதேச் வணிகர்களிடம் மட்டுமே கொள்வனவு செய்ய்ய முடியுமான நிலை இருந்தபோதும் அதற்கும் கூடக் குறைஷியர் விடுபவர்களாக இருக்கவில்லை.

ஆனால் பகிஷ்கரிப்பை விரும்பாத நல்ல உள்ளம் கொண்ட குறைஷியர் சிலர் பிறர் அறியா வண்ணம் இரகசியமாக முஸ்லிம்களுக்கு உணவுப் பண்டங்ககளைக் கொடுத்துதவி வந்தனர். இக்கால கட்டத்திலும் நபியவர்கள் தமது அழைப்புப் பணியை கைவிடாது தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். அவர்கள் வெளி நாட்டு ஹாஜிகளைச் சந்தித்து பிரசாரம் செய்து வந்தார்கள். அதேவேளை குறைசியர் தஃவாவைக் குழப்பும் முயற்சியைக் கைவிடவுமில்லை.

இந்நிலையில் மூன்றாண்டுகள் உருண்டோடின. இதற்கிடையில் நபியவர்களும் அவர்களோடு ஷிஃபு அபூதாலிபில் வாழ்தோரும் பட்ட துன்பங்களைக் கண்டு அனுதாபப்பட்ட நல்ல மனம் கொண்ட குறைஷியர் சிலர் பகிஷ்கரிப்பு அறிவித்தலுக்கு எதிராக ஆதரவு திரட்டும் முயற்சியில் இரகசியமாக இறங்கினர். பின்னர், இப்பணிக்கெனச் சேர்ந்த ஐவர் வரையில் கஃபாவில் கூடி பகிஷ்கார அறிவித்தலைக் கிழித்தெறிய வேண்டுமென தமக்குள் பேசிக் கொண்டனர். அப்போது அங்கிருந்த அபூஜஹ்ல் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தான். இது பற்றிய வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த அபூதாலிப் பகிஷ்கரிப்பு ஒப்பந்தத்தைக் கறையான் அரித்துவிட்டதாகவும் அதிலிருந்த அல்லாஹ்வின் நாமம் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் நபியவர்கள் கூறி தம்மை அனுப்பி வைத்த செய்தியைக் கூறினார்.

முஸ்லிம்கள் மீது அனுதாபம் கொண்ட குறைஷியர்ருள் ஒருவரான முத்இம் இப்னு அதீ என்பவர் அறிவித்தலைக் கிழித்தெறிவதற்காக அங்கு சென்ற போது நபியவர்களின் வாக்குப்படி அல்லாஹ்வின் நாமத்தைத் தவிர ஏனைய அனைத்துமே கறையான்களால் அரிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அறிவித்தலை இரகசியமாக எதிர்த்த குறைஷியர் முஸ்லிம்களை பகிரங்கமாக ஆதரிக்க முற்பட்டனர். இதன் விளைவாக முஸ்லிம்கள் முற்றுகையிலிருந்து வெளிவந்தனர்.

நுபுவ்வத் 7ம் ஆண்டு முஹர்ரம் மாதம் ஆரம்பமான முற்றுகை நுபுவ்வத் 10ம் வருடம் முடிவடைந்தது.

பகிஷ்கரிப்பு கை விடப்பட்ட போதிலும் காபிர்கள் தமது கெடுபிடிகளைத் தளர்த்தவில்லை. நபியவர்களால் தமது தஃவாப் பணியை நிம்மதியாக, சுதந்திரமாகச் செய்ய முடியவில்லை. குறைஷியர் பெரிதும் இடையூறாகவே இருந்து வந்தனர்.

கடைசியாக குறைஷியர் அபூதாலிபிடம் தூது சென்றார்கள். இக்குழுவில் உத்பா, ஷைபா, உமையா, அபூஜஹ்ல். அபூசுப்யான் போன்ற குறைஷித் தலைவர் உட்பட ஏறத்தாழ 25 பேர் இடம்பெற்றனர்.

தூதுக்குழுவின் அச்சுறுத்தலைக் கேட்ட அபூதாலிப் நபியவர்களை அழைத்து இணக்கமானதொரு வழிக்கு வருமாறு ஆலோசனை கூறினார். ஆனால், நபியவர்கள் இதில் விட்டுக்கொடுப்பதற்கில்லை என்றும், தனது வலக்கரத்தில் கதிரவனையும் இடக்கரத்தில் வெண்மதியையும் வைத்தாலும் குறைஷியர் சமாதானம் பேசிய போதிலும் அதற்குத் தான் இசைவாகப் போவதில்லை; தனது தஃவத் பணியைக் கைவிடப் போவதில்லை என்றும் ஆணித்தரமாக எடுத்துக் கூறினார்கள். அத்துடன் தொடர்ந்து தனக்கு ஆதரவளிக்க அபூதாலிபால் முடியாவிட்டால் அவர் தனது ஆதரவை விளக்கிக் கொள்ளலாம் என்றும் நபியவர்கள் அறிவித்தார்கள். நபியவர்களின் தளரா உறுதியைக் கண்டு எந்நிலையிலும் அவர்களைக் கைவிடுவதில்லை என்று அபூதாலிப் உறுதியளித்தார்.

ஆமுல் ஹுஸுன் (துக்க ஆண்டு)

பகிஷ்கரிப்பு கைவிடப்பட்ட  சில காலத்தில் அபூதாலிப் அவர்களும் அடுத்து கதீஜா (ரழி) அவர்களும் காலமானார்கள். இவ்விருவரது இழப்பு நபியவர்களுக்குப் பெரும் சோதனையாக அமைந்தது.

அபூதாலிப் நபியவர்களைப் பல வழிகளிலும் காப்பாற்றியவர். குறைஷியரின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலும் நபியவர்களுக்குத் துணையாக நின்று அவர்களை கண்ணெனக் காத்தவர். அவரது மரணம் நபியவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் பேரிழப்பாக அமைந்தது.

நபியவர்கள் மீது அபூதாலிபுக்கு அளவு கடந்த அன்பு இருந்தது போன்றே  நபியவர்களுக்கும் இவர்களிடம் அதிகளவு அன்பு இருந்தது. அபூதாலிப் இஸ்லாத்தை ஏற்று விமோசனம் பெற வேண்டுமென நபியவர்கள் பெரிதும் விரும்பினார்கள்.

அவரின் மரணப் படுக்கையிலும் நபியவர்கள் இவ்வேண்டுகோளை முன்வைத்தார்கள். ஆனால், அபூதாலிப் தனது இறுதி நேரத்திலும் கலிமா மொழிந்து முஸ்லிமாகவில்லை. இது நபியவர்களுக்கு மிகுந்த மன வேதனையாக இருந்தது.

அப்பொழுது, "(நபியே) நீர் விரும்புபவர்களை (எல்லாம்) நிச்சயமாக நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது. ஆனால், அல்லாஹ் தான் நாடியவர்களை நிச்சயமாக நேர்வழியில் செலுத்துகிறான்." (28:56) என்ற வசனத்தின் மூலமாக அல்லாஹ் நபியவர்களுக்கு ஆறுதல் வழங்கினான்.

அபூதாலிப் மரணமடைந்த துக்கத்திலிருந்து நபியவர்கள் மீளவில்லை. அதற்குள் நபியவர்களின் அருமை மனைவி கதீஜா (ரழி) அவர்களும் மரணமடைந்தார்கள். கால் நூற்றாண்டு கால வாழ்க்கையில் கதீஜா (ரழி) அவர்கள் நபியவர்களுக்குப் பல வழிகளிலும் உதவியாக இருந்தார்கள். இருவரும் ஒருவர் மீது ஒருவர் அளவு கடந்த அன்பு கொண்டிருந்தார்கள். கதீஜா (ரழி) அவர்கள் வபாத்தாகும் வரை நபியவர்கள் வேறெந்தப் பெண்ணையும் மணக்கவில்லை.

கதீஜா (ரழி) அவர்கள் பற்றி குறிப்பிடும் போது நபியவர்கள், "மக்கள் என்னை நிராகரித்த போது அவர் என்னை நபியென நம்பினார். மக்கள் என்னைப் பொய்யன் என்ற போது அவர் என்னை உண்மைப்படுத்தினார். மக்கள் எனக்குக் கொடுக்காத போது அவர் என்னைத் தனது செல்வத்தில் பங்காளராக்கினார். மற்றைய மனைவியரினால் எனக்குக் குழந்தைகள் இல்லை. அவர் மூலம் அல்லாஹ் எனக்குக் குழந்தைப் பாக்கியத்தை அருளினான்" என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

இத்துக்ககரமான நிகழ்ச்சிகள் இரண்டும் நடைபெற்ற நுபுவ்வத் 10ம் வருடம் 'ஆமுல் ஹுஸ்ன்' (துக்க ஆண்டு) எனப் பெயர் பெற்றது.


தாயிபில் தஃவாப் பணி

குறைஷியர் சத்தியத்தை ஏற்காதது மாத்திரமன்றி அதை ஒழித்துக் கட்டவும் அயராது முயற்சித்து வந்தனர். குறைஷியர் நபியவர்களின் போதனைகளை செவிமடுக்கக் கூடாதென்ற கட்டுப்பாடு மக்காவில் கண்டிப்பாகப் பேணப்பட்டு வந்ததால் பிரசாரத்திற்கான புதியதொரு களத்தை அமைத்துக் கொள்வதற்காக நபியவர்கள் தமது கவனத்தை தாயிப் நகரின் பக்கம் திருப்பினார்கள். தாயிபில் வாழும் செல்வாக்குமிக்க ஸகீப் கிளையினர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் மக்கத்து முஸ்லிம்கள் இன்னல்களிலிருந்து பாதுகாப்புப் பெற வழி பிறக்கும். இஸ்லாம் எழுச்சி பெற அது நெம்பு கோலாக அமையும் என்று நம்பி தாயிப் நகரை இப்பணிக்குத் தெரிவு செய்தார்கள்.

தயிப் பயணத்தில் நபியவர்களுடன் வளர்ப்பு மகன் ஸைதும் சென்றார். மக்கா - தாயிப் பாதையில் வசிப்போருக்கு இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுத்துக்கொண்டே நபியவர்கள் தாயிப் நகர் சென்றடைந்தார்கள்.இப்பணியில் தயிபில் பத்து நாட்களை அவர்கள் கழித்தார்கள்.

ஸகீப் குலத் தலைவர்கள் மூவரோடு உரையாடி அழைப்புக் கொடுத்தார்கள். ஆனால் அவர்கள் மக்கத்துக் குறைசியரின் எதிர்ப்புக்கு  அஞ்சி இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அத்துடன் நில்லாது அவர்கள் நபியவர்களை ஊரைவிட்டே வெளியேறிச் சென்றுவிடுமாறு வேற் எச்சரிக்கையும் செய்தார்கள். நபியவர்கள் அங்கிருந்து வெளியேறி வந்த போது மக்கள் அவர்களை கல்லால் அடித்துக் காயப்படுத்தினர். இச்சன்ந்தர்ப்பத்தில்  தோட்டம் ஒன்றில் பணி செய்துகொண்டிருந்த கிறிஸ்தவ  அடிமை ஒருவர் நபியவர்களுக்கு உதவியதோடு  அவர்களோடு உரையாடி இஸ்லாத்தைப் பற்றி அறிந்து முஸ்லிமானார்.

மக்கா திரும்பும் வழியில் நபியவர்கள் "வாதீ நக்ஹ்லா"  எனுமிடத்தில் சில நாட்கள் தங்கினார்கள். அங்கு ஜிங்களில் ஒரு தொகுதியினர். நபியவர்களிடம் வந்து அல்குர் ஆனைச் செவியுற்று இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.

தயிபிலிருந்து திரும்பிய  நபியவர்கள் "முத்இம்" என்ற ஒருவரின் பாதுகாப்பில் மக்கா வன்ந்து  சேர்ந்தார்கள். குறைசியரின் பலத்த எதிர்ப்புக் காரணமாக சுதேசிகளுக்கு மத்தியில் இஸ்லாத்தைப் பிரசாரம் செய்ய முடியாத நிலை தோன்றியது. எனவே நபியவர்கள் வியாபார நோக்கிலும் ஹஜ்ஜுக்காவும் வந்த் வெளியூர்வாசிகளிடம் தஃவாப் பணியை மேற்கொண்டார்கள். இதனால் "யஸ் ரிப்" வசிகளில் சிலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.

நூவ்வத்தின் 11ம் ஆண்டு ஹஜ் காலத்தில் நபியவர்கள் யஸ்ரிபில் இருந்து வந்த அறுவருக்கு அழிப்புக் கொடுத்தார்கள். "அஸ்அத் இப்னு ஸுராரா என்பவரின் தலைமையில் வந்திருந்த  "கஸ்ரஜ்" கோத்திரத்தைச் சேர்ந்த இவர்கள் அறுவரும், இஸ்லாத்தைத் தழுவினர். பின்னர் இவர்கள் யஸ்ரிப் சென்று அங்கு ஒ வ்வொரு வீடாகச் சென்று இஸ்லாத்தைப் பற்றி  எடுத்துக் கூறினர்.

மனைவி கதீஜாவின் மரணத்தால் தாரமிழந்து தனிமையில் வாழ்ந்த நபியவர்கள் நுபுவ்வத்தின் 10ம் ஆண்டே "ஸவ்தா பித் ஸம்ஆ"  எனும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்கள். மேலும் நுபுவ்வத்தின் 11ம் ஆண்டு நபியவர்கள்  ஆய்ஷா பிந்த் அபூபக்ரைத் திருமணம் செய்து கொள்வதற்கான ஒப்பந்தம் நனடைபெற்றது.


முதலாம் அகபா உடன்ப்டிக்கை

நுபுவ்வத்தின் 11ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுச் சென்ற யஸ்ரீப் வாசிகள் அறுவரினதும் முயற்சியால் அடுத்த ஹஜ்ஜின்போது நுபுவ்வத்தின் 12ம் வருடம் பன்னிரண்டு பேர் அங்கிருந்து வந்து நபியவர்களைச் சந்தித்து உரையாடி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். இவர்களுள் முன்னையோரில் ஐவரும் புதியோர் 70 பேர்களும் இருந்தனர். அவர்களுள் இருவர் ஔஸ் வர்க்கத்தினர்; ஏனையோர் கஸ்ரஜ் வர்க்கத்தினராவர்.

இப்பன்னிருவரும் நபியவர்களுடன் "பைஅத்" செய்து கொண்டார்கள். இதன் நிபந்தனைகள் பின்வருமாறு:
1. அல்லாஹ்வுக்கு இணைவைப்பதில்லை
2. திருடுவதில்லை
3. விபசாரம் செய்வதில்லை
4. குழந்தைகளைக் கொலை செய்வதில்லை
5. அவதூறு சொல்வதில்லை
6. நபியவர்களுக்கு மாறு செய்வதில்லை.

மினாவிலுள்ள "அகபா" எனுமிடத்தில் இந்த பைஅத் நடைபெற்றமையினாலும் இதன்பிறகு அடுத்த வருடம் இதே இடத்தில் பிறிதொரு பைஅத் நடை பெற்றமையாலும் இந்த பைஅத்  முதலாம் அகபா உடன்படிக்கை என்றழைக்கப்படுகிறது.

இப்பன்னிருவரும்  யஸ்ரீப் மீண்டபோது அவர்களுடன் நபியவர்கள் தனது பிரதிநிதியாக முஸ்அப் இப்னு உமைர் எனும் தனது தோழர் ஒருவரை அனுப்பி வைத்தார்கள். முஸ்அப் (ரழி), அஸ் அத் எனும் பிறிதொரு தோழரோடு இணைந்து இருவருமாக யஸ்ரீபில் முழுமூச்சாக தஃவப் பணியில் ஈடுபட்டனர். இதனால்  யஸ்ரீப் வாசிகளில் கணிசமான தொகையினர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். இச்சுப செய்தியுடன் அடுத்த ஹஜ்ஜுக்கு முன்பதாகவே முஸ்அப் (ரழி) மக்கா திரும்பினார்.

நபியவர்களின் வாழ்க்கையில் சோதனைகள் நிறைந்த மக்காப் பருவத்தில் கடைச்ப் பகுதியான இக்காலகட்டத்திலேயே "மிஃராஜ்" என்ற மாபெரும் அற்புத நிகழ்ச்சியான விண்ணுலக யாத்திரை இடம்பெற்றது. இது நபியவர்களுக்கு மன ஆறுதலும் தெம்பும் அளிப்பதாக அமைந்தது.


இரண்டாம் அகபா உடன்படிக்கை

நுபுவ்வத்தின் 13ம் ஆண்டு யஸ் ரிபில் இருந்து 73 ஆண்களும்  02 பெண்களுமாக 75 முஸ்லிம்கள்  ஹஜ்ஜுக்கு வருகை தந்தனர். இவர்களி நபியவர்கள் நள்ளிரவில் அகபாவில் சந்தித்தார்கள் நபியவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரழி) அப்போது இஸ்லாத்தை ஏற்காவிடினும் இச்சந்திப்பின் போது உடனிருந்தார்.

யஸ்ரிப் வாசிகள் நபியவர்களுக்கு பின்வரும் நிபந்தனைகளின் மீது பைஅத் செய்து கொடுத்தனர்.
1. முன்னர் கூறப்பட்ட 1ம் அகபா உடன்படிக்கையின் நிபந்தனைகள்
2. செல்வத்திலும் வறுமையிலும் தீனுக்காகச் செலவு செய்தல்
3. நலவற்றை ஏவுதல்; தீயவற்றைத் தடுத்தல்
4. அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றல். இது விடயத்தில் எவரது எதிர்ப்புக்கும் அஞ்சாதிருத்தல்
5. ஆபத்துக்களில் இருந்து நீங்கள் உங்களையும் உங்களது மனைவி மக்களையும் பாதுகாப்பது போன்று என்னைப் பாதுகாத்தல்.

நீங்கள் இவற்றை நிறைவேற்றினால் உங்களுக்குச் சுவர்க்கம் உண்டு என்று நபியவர்கள் கூறினார்கள்.

இதுவே இரண்டாம் அகபா உடன்படிக்கை எனப்படுகிறது. இதன்போது இருதரப்பினரும் மீண்டும் மீண்டும் ஷரத்துக்களைக் கூறிச் சத்தியப்பிரமாணத்தை உறுதி செய்து கொண்டனர்.

இந்த இரண்டாம் அகபா உடன்படிக்கையின்போது நபியவர்களின் சார்பில் அப்பாஸும் சில சந்தர்பங்களில் பேசினார். தான் இஸ்லாத்தைத் தழுவாவிட்டாலும் நபியவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கி வருவதாகவும், என்றாலும் அவர்கள் யஸ்ரிப் வர விரும்புவதாகவும், அவர்கள் அங்கு வரும் பட்சத்தில் அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கவேண்டியது யஸ்ரிப் வாசிகளின் தலையாய கடமை என்றும் அப்பாஸ் யஸ்ரிப் மக்களுக்கு எடுத்துக் கூறினார்.

பைஅத் பேச்சுவார்த்தை முடிவடைந்த பின்னர், பிரசார வேலைகளுக்காகவும் மக்களை வழி நடாத்துவதற்காகவும் யஸ்ஸ்ரிப் வாசிகளில் "நுகபா" (தலைவர்) என்றழைக்கப்பட்ட பன்னிருவர் தெரிவு செய்யப்பட்டனர். இதில் ஒன்பது கஸ்ரஜ்களும் மூன்று ஔஸ்களும் இடம் பெற்றனர்.

நள்ளிரவில் நடைபெற்ற இக்கூட்டம் பற்றிக் குறைஷியருக்குத் தெரியவந்ததாயினும் அவர்களால் அதை உறுதி செய்து கொள்ள முடியவில்லை. ஹஜ் முடிவுற்று மக்கள் கூட்டம் கலைந்த பின்னரே அவர்களுக்கு செய்தி ஊர்ஜிதமாயிற்று. இதனால் அவர்களால் யஸ்ரிப் முஸ்லிம்களைப் பிடிக்க முடியவில்லை. ஆயினும் ஒரு சிலரை மட்டும் கைது செய்து துன்புறுத்தினர்.



ஹிஜ்ரத்

























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக