திங்கள், 15 ஆகஸ்ட், 2011

கடற்படை மீது முஸ்லிம் மக்கள் தாக்குதல்

(கிண்ணியாவில் பதுகாப்புப் படையினருக்கும் முஸ்லிம் சமூகத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பாக ஒரு தமிழ் வெப்தளம் வெளியிட்டிருந்த கருத்து சிந்தனைக்குரியது. 'யுத்தம் முடிந்த கையுடன் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை மேற்கொள்ளப்படலாம்' என்ற சந்தேகத்தை இது ஓரளவு ஊர்ஜிதம் செய்வது போல் இருக்கிறது. நமது பிரச்சினைகளை பல கண்ணோட்டத்திலும் அணுகுவது, எமது இருப்புக்கு வரும் அச்சுறுத்தல்களை அறிந்து கொள்ள உதவலாம் என்ற வகையில் அந்த கருத்துக்கள் கீழே தரப்படுகின்றன.)


மக்களை ஒருவகையான பய உணர்விற்கு உட்படுத்துவதும், அவற்றிலிருந்து தமது தொடர்ச்சியான அதிகாரத்தை உறுதி செய்துகொள்வதும் பாசிஸ்டுக்களின் பொதுவான பண்புகளில் ஒன்று. இலங்கை முழுவதும் அப்பாவி மக்கள் மீதான அரச அதிகாரத்தின் புதிய தாக்குதல் கிறீஸ் பூதம் என்ற உருவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

“கிறிஸ்பூதம் என்று சந்தேகிக்கப்பட்ட குழு ஒன்றை பிரதேச மக்கள் துரத்திச்சென்றனர். அப்போது அந்தக்குழுவினர் கிண்ணியா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கடற்படை முகாமுக்குள் ஓடி தப்பினர்.”

இதுவரைக்கும் இந்த வன்முறைகளை இலங்கை அரசே கட்டவிழ்த்துவிட்டுள்ளது எபதை ஜே.வி.பி வெளிப்படையாகக் கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மக்கள் போராட்டங்களை இலங்கைப் பாசிஸ்டுக்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. அதிர்ச்சியடைந்த பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ச மக்கள் போராட்டங்கள் நடத்தக் கூடாது என்றும், கிரீஸ் பூதம் என்ற பெயரில் அவரது அரசு உலாவ விட்டிருக்கும் சமூக விரோதிகளை மக்கள் கண்டுகொள்ளக் கூடாது என்றும் மக்களை எச்சரித்திருக்கிறார்.
 
கிழக்கில் மர்மமனிதன் விவகாரத்தினால் எழுந்துள்ள நெருக்கடிகள் பற்றி ஆராய  நேற்று மட்டக்களப்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா  இராணுவத்தின் கிழக்குப் படைத்தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா  பொதுமக்களை, குறிப்பாக முஸ்லிம்களை கடுமையாக மிரட்டும் வகையில்  உரையாற்றியுள்ளார்.

கிழக்கில் நூற்றுக்கணக்கில் சோதனைச்சாவடிகள்  அமைத்து வாழ்வின் பெரும்பாலான நேரத்தை வீதியில் கழிக்க வைப்பேன் என்றும்,  வீடுகளுக்குள் புகுந்து சோதனையிட்டு கைது செய்வேன் என்றும், கடைகளை  மூடவைத்து வியாபாரத்தை நடக்க விடாமல் கெடுப்பேன் என்றும் அவர் கண்டபடி  அச்சுறுத்தியுள்ளார்.

கிறீஸ் பூதம் என்ற பெயரில் பெண்கள் மீது பாலியல் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டும், கொள்ளை திருட்டு போன்ற சமூகவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களும் அரச படைகள் என்பதை மக்கள் உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர் போராட்டங்களில் ஈடுபட்டனர். கடற்படையைச் முற்றுகையிட்டுத் தாக்குதல் நடத்தினர்.
 
தமது சமூகவிரோதச் செயலைக்கண்டு வாழ்வதற்காகப் போராடிய மக்கள் மீது கடற்படையும் பொலீசாரும் தாக்குதல் நடத்தினர். பொதுமக்கள் மீது கடற்படையினர் துப்பாக்கி சூட்டை நடத்தினர். இதனால் காயமடைந்த இரண்டு பொதுமக்கள் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடு பின்னர் திருகோணமலைக்கு மாற்றப்பட்டனர்.

இதேவேளை பைசால் நகரில் ஏற்பட்ட நிலைமையை கட்டுப்படுத்த சென்ற கிண்ணியா பொலிஸ் அதிகாரி உட்பட்ட குழுவினர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர்.

அத்துடன் அவர்கள் சென்ற வாகனமும் தீயிடப்பட்டது. இதன்போது மூன்று பொலிஸார் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இப்போராட்டங்களிலிருந்து இரண்டு சில முடிபுகளுக்கு வரலாம்.

1. இலங்கையில் பாசிச இராணுவ ஆட்சிக்கு மத்தியிலும் மக்கள் போராடுகிறார்கள். இது வாழ்வதற்கான அவர்களின் போராட்டம்.
2. மலையகத்திலும், வடகிழக்கிலும் வாழும் தமிழ்ப் பேசும் மக்களின் (முஸ்லீம்கள் உட்பட) போராட்டம் என்பதால் அரச இராணுவத்தால் உடனடியாக ஒடுக்கிவிட முடியவில்லை.
3. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட சந்தர்ப்பவாத அரசியல் வியாபாரிகள் மக்கள் போராட்டங்களை ஆதரிக்கவில்லை.
4. புலம் பெயர் நாடுகளின் குறுந்தேசியக் குழுக்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களைக் குறைந்தபட்சம் ஊக்கப்படுத்தும் அறிக்கை கூட வெளியிடவில்லை.
 
அரேபியா நாடுகளில் ஆரம்பித்து ஐரோப்பா ஈறாக இலங்கை வரை மக்கள் போராடுகிறார்கள். அவர்களின் சந்தர்ப்வாத அரசியல் தலைமைகள் அவர்களைக் கைகழுவி விடுகின்றன. எதோ ஒருவகையில் அரச அதிகாரங்களோடு சமரசம் செய்துகொண்டு குறுக்கு வழிகளில் அதிகாரத்தில் பங்கு கேட்கும் இவர்களுகளும் மக்களின் எதிரிகளே.

சில உண்மைகள் வெளிப்படுகின்றன:

1. மக்கள் போராடுவார்கள்.
2. முஸ்லீம்கள் மலயக மக்கள் இணைந்த ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் சிங்கள் மக்கள் மத்தியிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களோடு இணைந்து போராடும் போது இலங்கை அரச பாசிசம் தோற்றுப் போகும்.
3. சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகள் நிராகரிக்கப்பட்டு புதிய அரசியல் தலைமை மக்கள் மத்தியிலிருந்து உருவாகும்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக