திங்கள், 17 ஜனவரி, 2011

நவீன காலணித்துவத்தின் சுவடுகள் - 1

குர்ஆன் மத்ரஸாக்களும் நமது இளம் தலைமுறையும்
அல்லாஹ்வின் அருளால், வருடாந்தம், 200க்கும் அதிகமான மத்ரஸாக்களிலிருந்து மௌலவிமார்கள் பட்டம் பெற்று சமூகத்துக்குள் வருகிறார்கள். இவர்களது குர்ஆனிய அறிவு திருப்திகரமானதாக இருந்தாலும், இவர்களுடைய தொகை மிகச் சொற்பமானதாகும்.


மறு பக்கத்தில், எமது இளைய சமூகத்தில் கணிசமான ஒரு தொகையினர், அல் குர்ஆனை திருத்தமாக ஓத முடியாத ஒரு துர்ப்பாக்கியமான சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவர்கள் சா/த வரை கல்வி கற்றிருப்பார்கள். அவர்களுக்கு தமிழ் நன்றாகத் தெரியும், சிங்களம் நன்றாகத் தெரியும், ஆங்கிலமும் நன்றாகத் தெரியும். ஆனால், அல்லாஹ்வின் கலாமாகிய குர்ஆனை மட்டும் திருத்தமாக ஓதத் தெரியவில்லை.

நவீன கல்வி ஒழுங்கு மற்றும் ஊடகத்துறை ஆகிய இரண்டு பிரதான அம்சங்களினூடாக முஸ்லிம்களாகிய நாம் எவ்வாறு இஸ்லாமிய அடிப்படைகளை விட்டும் தூரமாக்கப் பட்டுள்ளோம் என்பதைப் பாருங்கள்!

இது இப்படியிருக்க, அரபு மத்ரஸாக்களை நிருவகித்து நடாத்துவதில் உள்ள கவர்ச்சி, சாதாரண குர்ஆன் மத்ரஸாக்களில் இல்லை. இதனால், உலமாக்கள் கூட, பல போது, குர்ஆன் மத்ரஸாவொன்றை நிருவகித்து நடாத்துவதை தரம் குறைந்த ஒரு செயலாகக் கருதி விட்டு விடுவதைப் பார்க்கிறோம். இதன் விளைவாக, குர்ஆன் மத்ரஸாக்கள், தரம் குறைந்தோரால், வீடுகளில், மேலதிக வருமானத்துக்காக நடாத்தப்படும் ஒரு விடயமாக மாறி வருவதையும் காண முடிகிறது.

எனவே, எமது சமுதாயம் இறை திருப்தியுடன் வாழும் ஒழுங்கை நோக்காகக் கொண்டு, திட்டமிடப்பட்ட பாட அலகுகளுடன் கூடிய அல் குர்ஆன் மத்ரஸாக்களை நோக்கி எமது கவனம் அவசரமாகத் திருப்பப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக